Divya Prabandham Pasurams 0001 to 0750


ஸ்ரீ: 
ஸ்ரீமதே ராமானுஜாய நம:


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 01 – 751) 

திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் 
நாதமுனிகள் அருளிச் செய்தது 

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான் 
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக| 
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத் 
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி|| 

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை 
இருவிகற்ப நேரிசை வெண்பா 

மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால் 
சொன்னார்கழற்கமலம்சூடினோம் – முன்னாள் 
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும் 
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து 

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று 
ஈண்டியசங்கமெடுத்தூத – வேண்டிய 
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான் 
பாதங்கள்யாமுடையபற்று. 

பெரியாழ்வார் திருவடிகளே சரணம். 

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: 


பெரியாழ்வார் அருளிச்செய்த 
திருப்பல்லாண்டு 


காப்பு 
குறள்வெண்செந்துறை 

1: 
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடிநூறாயிரம் 
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன் 
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2) 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1. 

2: 
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு 
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு 
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு 
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. (2) 

3: 
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின் 
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம் 
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை 
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. 3 

4: 
ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து 
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ 
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று 
பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. 4 

5: 
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை 
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு 
தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி 
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. 5. 

6: 
எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி 
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில் 
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை 
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6. 

7: 
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின் 
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம் 
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி 
பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 7. 

8: 
நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் 
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் 
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல 
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. 8. 

9: 
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு 
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் 
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் 
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9. 

10: 
எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட 
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண் 
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய 
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 10. 

11: 
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன் 
செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன் 
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி 
பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (2) 11. 

12: 
பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும் 
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் 
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று 
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (2) 12. 

——————————————————————————–

பெரியாழ்வார் திருமொழி 


முதற்பத்து 
முதல் திருமொழி – வண்ண மாடங்கள் 
(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)

கலிவிருத்தம் 

13: 
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் 
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் 
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக் 
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2) 1. 

14: 
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் 
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார் 
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று 
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 2. 

15: 
பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில் 
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார் 
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு 
வோணத்தா நுலகாளுமென்பார்களே. 3. 

16: 
உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார் 
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார் 
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும் 
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4. 

17: 
கொண்டதாளுறி கோலக்கொடுமழு 
தண்டினர் பறியோலைச்சயனத்தர் 
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர் 
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். 5. 

18: 
கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர் 
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் 
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட 
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. 6. 

19: 
வாயுள்வையகம்கண்ட மடநல்லார் 
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் 
பாயசீருடைப் பண்புடைப்பாலகன் 
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7. 

20: 
பத்துநாளும்கடந்த இரண்டாநாள் 
எத்திசையும் சயமரம்கோடித்து 
மத்தமாமலை தாங்கியமைந்தனை 
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8. 

21: 
கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும் 
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும் 
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும் 
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 9. 

22: 
செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர் 
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை 
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப் 
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2) 10. 

இரண்டாம் திருமொழி – சீதக்கடல் 
(கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 

வெண்டளையால் வந்த கலித்தாழிசை 

23: 
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி 
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த 
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும் 
பாதக்கமலங்கள் காணீரே 
பவளவாயீர். வந்துகாணீரே. (2) 1. 

24: 
முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும் 
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும் 
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள் 
ஒத்திட்டிருந்தவா காணீரே 
ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2. 

25: 
பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை 
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை 
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும் 
கணைக்கால்இருந்தவாகாணீரே 
காரிகையீர். வந்துகாணீரே. 3. 

26: 
உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண 
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின் 
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான் 
முழந்தாள்இருந்தவாகாணீரே 
முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4. 

27: 
பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு 
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை 
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான் 
குறங்குவளைவந்துகாணீரே 
குவிமுலையீர். வந்துகாணீரே. 5. 

28: 
மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை 
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில் 
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன் 
முத்தமிருந்தவாகாணீரே 
முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6. 

29: 
இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை 
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன் 
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும் 
மருங்கும்இருந்தவாகாணீரே 
வாணுதலீர். வந்துகாணீரே. 7. 

30: 
வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து 
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும் 
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய 
உந்திஇருந்தவாகாணீரே 
ஒளியிழையீர். வந்துகாணீரே. 8. 

31: 
அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி 
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த 
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த 
உதரம்இருந்தவா காணீரே 
ஒளிவளையீர். வந்துகாணீரே. 9. 

32: 
பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு 
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை 
குருமாமணிப்பூண் குலாவித்திகழும் 
திருமார்புஇருந்தவாகாணீரே 
சேயிழையீர். வந்துகாணீரே. 10. 

33: 
நாள்களோர்நாலைந்து திங்களளவிலே 
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய் 
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான் 
தோள்கள்இருந்தவாகாணீரே 
சுரிகுழலீர். வந்துகாணீரே. 11. 

34: 
மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற 
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை 
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய 
கைத்தலங்கள்வந்துகாணீரே 
கனங்குழையீர். வந்துகாணீரே. 12. 

35: 
வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக் 
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு 
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய 
கண்டம்இருந்தவாகாணீரே 
காரிகையீர். வந்துகாணீரே. 13. 

36: 
எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு 
அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர் 
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச் 
செந்தொண்டைவாய்வந்துகாணீரே 
சேயிழையீர். வந்துகாணீரே. 14. 

37: 
நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால் 
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு 
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும் 
மூக்கும்இருந்தவாகாணீரே 
மொய்குழலீர். வந்துகாணீரே. 15. 

38: 
விண்கொளமரர்கள் வேதனைதீர முன் 
மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து 
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான் 
கண்கள்இருந்தவாகாணீரே 
கனவளையீர். வந்துகாணீரே. 16. 

39: 
பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய 
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற 
உருவுகரிய ஒளிமணிவண்ணன் 
புருவம்இருந்தவாகாணீரே 
பூண்முலையீர். வந்துகாணீரே. 17. 

40: 
மண்ணும்மலையும் கடலும்உலகேழும் 
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு 
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை 
திண்ணம்இருந்தவாகாணீரே 
சேயிழையீர். வந்துகாணீரே. 18. 

41: 
முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும் 
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை 
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன் 
நெற்றிஇருந்தவாகாணீரே 
நேரிழையீர். வந்துகாணீரே. 19. 

42: 
அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு 
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப 
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான் 
குழல்கள்இருந்தவாகாணீரே 
குவிமுலையீர். வந்துகாணீரே. 20. 

தரவு கொச்சகக்கலிப்பா 

43: 
சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன 
திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன் 
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும் 
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2) 21. 

மூன்றாம் திருமொழி – மாணிக்கம் கட்டி
(கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 

கலித்தாழிசை 

44: 
மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி 
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் 
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான் 
மாணிக்குறளனே. தாலேலோ 
வையமளந்தானே. தாலேலோ. (2) 1. 

45: 
உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ 
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு 
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான் 
உடையாய். அழேல்அழேல்தாலேலோ 
உலகமளந்தானே. தாலேலோ. 2. 

46: 
என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு 
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு 
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி 
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ 
தாமரைக்கண்ணனே. தாலேலோ. 3. 

47: 
சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும் 
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும் 
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார் 
செங்கண்கருமுகிலே. தாலேலோ 
தேவகிசிங்கமே. தாலேலோ. 4. 

48: 
எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று 
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு 
வழுவில்கொடையான் வயிச்சிரவணன் 
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ 
தூமணிவண்ணனே. தாலேலோ. 5. 

49: 
ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும் 
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும் 
மாதக்கவென்று வருணன்விடுதந்தான் 
சோதிச்சுடர்முடியாய். தாலேலோ 
சுந்தரத்தோளனே. தாலேலோ. 6. 

50: 
கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும் 
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும் 
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள் 
கோனே. அழேல்அழேல்தாலேலோ 
குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. 7. 

51: 
கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை 
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ 
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள் 
நச்சுமுலையுண்டாய். தாலேலோ 
நாராயணா. அழேல்தாலேலோ. 8. 

52: 
மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும் 
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும் 
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள் 
அய்யா. அழேல்அழேல்தாலேலோ 
அரங்கத்தணையானே. தாலேலோ. 9. 

தரவு கொச்சகக் கலிப்பா 

53: 
வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட 
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய 
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல் 
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2) 10. 

நான்காம் திருமொழி – தன் முகத்து
(சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 

கலிநிலைத்துறை 

54: 
தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய் 
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் 
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ. 
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2) 1. 

55: 
என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான் 
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான் 
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல் 
மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2. 

56: 
சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும் 
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய் 
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற 
கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. 3. 

57: 
சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து 
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண் 
தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே 
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4. 

58: 
அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா 
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான் 
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல் 
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5. 

59: 
தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன் 
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான் 
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில் 
விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா. 6. 

60: 
பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள் 
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன் 
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல் 
மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 7. 

61: 
சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய் 
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள் 
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண் 
நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான். 8. 

62: 
தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய 
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான் 
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண் 
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9. 

63: 
மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை 
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர் 
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை 
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. (2) 10. 

ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு
(தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

64: 
உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா. 

ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல் 
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே. 

பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே. 
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச் 

செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக 
ஐய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை 

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. (2) 1. 

65: 
கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம் 

குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய். 
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி 

மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர 
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக் 

கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே. 
ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை 

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 2. 

66: 
நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே. 

நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால் 
தம்மனையானவனே. தரணிதலமுழுதும் 

தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும் 
விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும் 

விரவியவேலைதனுள்வென்றுவருமவனே. 
அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை 

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 3. 

67: 
வானவர்தாம்மகிழவன்சகடமுருள 

வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே. 
கானகவல்விளவின்காயுதிரக்கருதிக் 

கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே. 
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன் 

என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும் 
ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை 

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 4. 

68: 
மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார் 

வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு 
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை 

ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய். 
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன் 

முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய 
அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை 

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 5. 

69: 
காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா. 

கானகமாமடுவில்காளியனுச்சியிலே 
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா. 

துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே. 
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை 

அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய். 
ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை 

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 6. 

70: 
துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால் 

தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய 
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய 

நல்லதிறலுடையநாதனும்ஆனவனே. 
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத் 

தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என் 
அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை 

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 7. 

71: 
உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி 

உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும் 
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக் 

கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி 
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ் 

சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே. 
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை 

ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 8. 

72: 
பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும் 

பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர 
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக் 

கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக 
நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே 

நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ 
ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை 

ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 9. 

73: 
செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில் 

சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில் 
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின் 

பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும் 
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும் 

மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக 
எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை 

ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 10. 

74: 
அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும் 

ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே. 
என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை 

ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று 
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு 

ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ் 
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில் 

எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2) 11. 

ஆறாம் திருமொழி – மாணிக்கக்கிண்கிணி
(கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 

வெண்டளையால் வந்த கலித்தாழிசை 

75: 
மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல் 
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி 
பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு 
காணிகொண்டகைகளால்சப்பாணி 
கருங்குழல்குட்டனே. சப்பாணி. (2) 1. 

76: 
பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி 
தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட 
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம் 
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி 
மாயவனே. கொட்டாய்சப்பாணி. 2. 

77: 
பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன 
என்மணிவண்ணன். இலங்குபொற்றேட்டின்மேல் 
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன் 
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி 
ஆழியங்கையனே. சப்பாணி. 3. 

78: 
தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட 
வானிலாஅம்புலீ. சந்திரா. வாவென்று 
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம் 
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி 
குடந்தைக்கிடந்தானே. சப்பாணி. 4. 

79: 
புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து 
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே 
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண் 
பட்டிக்கன்றே. கொட்டாய்சப்பாணி 
பற்பநாபா. கொட்டாய்சப்பாணி. 5. 

80: 
தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது 
போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள 
பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று 
தேருய்த்தகைகளால்சப்பாணி 
தேவகிசிங்கமே. சப்பானி. 6. 

81: 
பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை 
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத 
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க 
சரந்தொட்டகைகளால்சப்பாணி 
சார்ங்கவிற்கையனே. சப்பாணி. 7. 

82: 
குரக்கினத்தாலே குரைகடல்தன்னை 
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை 
அரக்கர்அவிய அடுகணையாலே 
நெருக்கியகைகளால்சப்பாணி 
நேமியங்கையனே. சப்பாணி. 8. 

83: 
அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே 
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் 
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம் 
பிளந்திட்டகைகளால்சப்பாணி 
பேய்முலையுண்டானே. சப்பாணி. 9. 

84: 
அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை 
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி 
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக 
கடைந்திட்டகைகளால்சப்பாணி 
கார்முகில்வண்ணனே. சப்பாணி. 10. 

தரவு கொச்சகக்கலிப்பா 

85: 
ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை 
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன் 
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும் 
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2) 11. 

ஏழாம் திருமொழி – தொடர்சங்கிலிகை 
(தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

86: 
தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப 
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல் 
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க 
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ. (2) 1. 

87: 
செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல 
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக 
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன் 
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 2. 

88: 
மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய் 
பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும் 
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும் 
தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ. 3. 

89: 
கன்னற்குடம்திறந்தலொத்தூறிக் கணகணசிரித்துவந்து 
முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன் 
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான் 
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ. 4. 

90: 
முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட 
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல் 
பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும் 
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ. 5. 

91: 
ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த 
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து 
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து 
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. 6. 

92: 
படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல் 
இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று 
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென 
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. 7. 

93: 
பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய 
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர 
மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின் 
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 8. 

94: 
வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல் 
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து 
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே 
தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ. 9. 

95: 
திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன் 
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர 
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம் 
தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ. 10. 

96: 
ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை 
தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை 
வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார் 
மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே. 11. 

எட்டாம் திருமொழி — பொன்னியல்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 

கலித்தாழிசை 

97: 
பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி 
தன்னியலோசை சலஞ்சலனென்றிட 
மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல் 
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ 
எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. (2) 1. 

98: 
செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல் 
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப 
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய 
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ 
ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. 2. 


99: 
பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து 
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு 
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த 
அஞ்சனவண்ணனே. அச்சோவச்சோ 
ஆயர்பெருமானே. அச்சோவச்சோ. 3. 

100: 
நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன 
தேறிஅவளும் திருவுடம்பில்பூச 
ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று 
ஏறவுருவினாய். அச்சோவச்சோ 
எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. 4. 

101: 
கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி 
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும் 
சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை 
அழலவிழித்தானே. அச்சோவச்சோ 
ஆழியங்கையனே. அச்சோவச்சோ. 5. 

102: 
போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான் 
தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய் 
காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே. 
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ 
ஆயர்கள்போரேறே. அச்சோவச்சோ. 6. 

103: 
மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் 
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய 
சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய 
சக்கரக்கையனே. அச்சோவச்சோ 
சங்கமிடத்தானே. அச்சோவச்சோ. 7. 

104: 
என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன் 
முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன 
மன்னுநமுசியை வானில்சுழற்றிய 
மின்னுமுடியனே. அச்சோவச்சோ 
வேங்கடவாணனே. அச்சோவச்சோ. 8. 

105: 
கண்டகடலும் மலையும்உலகேழும் 
முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ. அன்று 
இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள 
மண்டைநிறைத்தானே. அச்சோவச்சோ 
மார்வில்மறுவனே. அச்சோவச்சோ. 9. 

106: 
துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட 
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட 
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று 
அன்னமதானானே. அச்சோவச்சோ 
அருமறைதந்தானே. அச்சோவச்சோ. 10. 

தரவு கொச்சகக்கலிப்பா 

107: 
நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை 
அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன 
மச்சணிமாடப் புதுவைகோன்பட்டன்சொல் 
நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2) 11. 

ஒன்பதாம் திருமொழி – வட்டநடுவே 
(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 

வெண்டளையால்வந்த கலித்தாழிசை 

108: 
வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க 
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல் 
சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என் 
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் 
கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2) 1. 

109: 
கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில் 
கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி 
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து 
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான் 
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 2. 

110: 
கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம் 
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான் 
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய 
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் 
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான். 3. 

111: 
நாந்தகமேந்திய நம்பிசரணென்று 
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் 
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர் 
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் 
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 4. 

112: 
வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி 
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ் 
பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு 
மண்பலகொண்டான்புறம்புல்குவான் 
வாமனன்என்னைப்புறம்புல்குவான். 5. 

113: 
சத்திரமேந்தித் தனியொருமாணியாய் 
உத்தரவேதியில் நின்றஒருவனை 
கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட 
பத்திராகாரன்புறம்புல்குவான் 
பாரளந்தான்என்புறம்புல்குவான். 6. 

114: 
பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி 
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும் 
மெத்தத்திருவயிறார விழுங்கிய 
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் 
ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 7. 

115: 
மூத்தவைகாண முதுமணற்குன்றேறி 
கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி 
வாய்த்தமறையோர் வணங்க இமையவர் 
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான் 
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 8. 

116: 
கற்பகக்காவு கருதியகாதலிக்கு 
இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில் 
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள் 
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான் 
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 9. 

தரவு கொச்சகக்கலிப்பா 

117: 
ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய 
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து 
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர் 
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2) 10. 


——————————————————————————–
இரண்டாம்பத்து

முதல்திருமொழி – மெச்சூது
(பூச்சிகாட்டி விளையாடுதல்.) 
கலித்தாழிசை 

118: 

மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி 
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய் 
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த 
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான் 
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். (2) 1. 

119: 
மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும் 
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன் 
சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற செங்கண் 
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் 
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 2. 

120: 
காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன் 
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி 
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற 
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் 
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 3. 

121: 
இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர் 
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப் 
புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட 
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் 
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 4. 

122: 
சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு 
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால் 
சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று 
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான் 
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 5. 

123: 
செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு 
சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த 
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய 
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் 
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 6. 

124: 
தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ? 
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம் 
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி 
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் 
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 7. 

125: 
கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத் 
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும் 
எங்கும்பரதற்கருளி வன்கானடை 
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான் 
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 8. 

126: 
பதகமுதலைவாய்ப் பட்டகளிறு 
கதறிக்கைகூப்பி என்கண்ணா. கண்ணா. என்ன 
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த 
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் 
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 9. 

தரவு கொச்சகக்கலிப்பா 

127: 
வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த 
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த 
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும் 
வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. (2) 10. 

இரண்டாம் திருமொழி – அரவணையாய்
(கண்ணனை முலையுண்ண அழைத்தல்) 

கலிவிருத்தம் 

128: 
அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே 
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ 
வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய 
திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. (2) 1. 

129: 
வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும் 
இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை 
எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே 
முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே. 2. 

130: 
தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார் 
வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா. 
உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன் 
நந்தகோபனணிசிறுவா. நான்சுரந்தமுலையுணாயே. 3. 

131: 
கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய 
பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று 
அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ 
கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. 4. 

132: 
தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து 
மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா. 
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா 
ஆயர்பாடிக்கணிவிளக்கே. அமர்ந்துவந்துஎன்முலையுணாயே. 5. 

133: 
மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு 
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார் 
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள் 
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா. முலையுணாயே. 6. 

134: 
பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலே 
கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி 
வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி 
கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா. நீமுலையுணாயே. 7. 

135: 
இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன் 
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி 
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு 
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே. 8. 

136: 
அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல் 
செங்கமலமுகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம்முற்றத்தூடே 
அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம. விம்ம 
அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே. முலையுணாயே. 9. 

137: 
ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே 
பாடிப்பாடிவருகின்றாயைப் பற்பநாபனென்றிருந்தேன் 
ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி 
ஓடியோடிப்போய்விடாதே உத்தமா. நீமுலையுணாயே. 10. 

138: 
வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம் 
நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர் 
பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார் 
சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே. (2) 11. 

மூன்றாம் திருமொழி – போய்ப்பாடு
(பன்னிருநாமம்: காதுகுத்துதல்) 
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

139: 
போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான் 

பொருதிறல்கஞ்சன்கடியன் 
காப்பாருமில்லைகடல்வண்ணா. உன்னைத் 

தனியேபோய்எங்கும்திரிதி 
பேய்ப்பால்முலையுண்டபித்தனே. 

கேசவநம்பீ. உன்னைக்காதுகுத்த 
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார் 

அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (2) 1. 

140: 
வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி 

மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப 
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத 

நாராயணா. இங்கேவாராய் 
எண்ணற்கரியபிரானே. திரியை 

எரியாமேகாதுக்கிடுவன் 
கண்ணுக்குநன்றுமழகுடைய 

கனகக்கடிப்பும்இவையா. 2. 

141: 
வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும் 

மகரக்குழைகொண்டுவைத்தேன் 
வெய்யவேகாதில்திரியையிடுவன் 

நீவேண்டியதெல்லாம்தருவன் 
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய 

ஒண்சுடராயர்கொழுந்தே. 
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து 

மாதவனே. இங்கேவாராய். 3. 

142: 
வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு 

வார்காதுதாழப்பெருக்கி 
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள் 

கோவிந்தா. நீசொல்லுக்கொள்ளாய் 
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால் 

இனியபலாப்பழம்தந்து 
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான் 

சோத்தம்பிரான். இங்கேவாராய். 4. 

143: 
சோத்தம்பிரான். என்றுஇரந்தாலும்கொள்ளாய் 

சுரிகுழலாரொடுநீபோய் 
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால் 

குணங்கொண்டிடுவனோ? நம்பீ. 
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன் 

பிரானே. திரியிடவொட்டில் 
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல் 

விட்டுவே. நீஇங்கேவாராய். 5. 

144: 
விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய். 

உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி 
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி 

மதுசூதனேயென்றிருந்தேன் 
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும் 

பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ. 
கண்ணா. என்கார்முகிலே. 

கடல்வண்ணா. காவலனே. முலையுணாயே. 6. 

145: 
முலையேதும்வேண்டேனென்றோடி 

நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு 
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப் 

பசுநிரைமேய்த்தாய். 
சிலையொன்றுஇறுத்தாய். திரிவிக்கிரமா. 

திருவாயர்பாடிப்பிரானே. 
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே 

விட்டிட்டேன்குற்றமேயன்றே. 7. 

146: 
என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண் 

என்னைநான்மண்ணுண்டேனாக 
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும் 

அனைவர்க்கும்காட்டிற்றிலையே 
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ. 

உன்காதுகள்தூரும் 
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே. 

திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே. 8. 

147: 
மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித் 

தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று 
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக் 

காணவேகட்டிற்றிலையே? 
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில் 

சிரீதரா. உன்காதுதூரும் 
கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற 

காரிகையார்சிரியாமே. 9. 

148: 
காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்? 

காதுகள்வீங்கியெறியில் 
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று 

விட்டிட்டேன்குற்றமேயன்றே 
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது 

பெருக்கித்திரியவும்காண்டி 
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட 

இருடீகேசா. என்தன்கண்ணே. 10. 

149: 
கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக் 

கடிகமழ்பூங்குழலார்கள் 
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும் 

பெருமானே. எங்களமுதே. 
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும் 

நோவாமேகாதுக்கிடுவன் 
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட 

பற்பநாபா. இங்கேவாராய். 11. 

150: 
வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து 

வலியவேகாதில்கடிப்பை 
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்? 

காதுகள்நொந்திடும்கில்லேன் 
நாவற்பழம்கொண்டுவைத்தேன் 

இவைகாணாய்நம்பீ. முன்வஞ்சமகளைச் 
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட 

தாமோதரா. இங்கேவாராய். 12. 

151: 
வார்காதுதாழப்பெருக்கியமைத்து 

மகரக்குழையிடவேண்டி 
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல் 

சிந்தையுள்நின்றுதிகழ 
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் 

பன்னிருநாமத்தாற்சொன்ன 
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார் 

அச்சுதனுக்குஅடியாரே. 13. 

நாலாம் திருமொழி – வெண்ணெயளைந்த
(கண்ணனை நீராட அழைத்தல்.) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

152: 
வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு 
திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன் 
எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன் 
நண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். (2) 1. 

153: 
கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால் 
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன் 
நின்றமராமரம்சாய்த்தாய். நீபிறந்ததிருவோணம் 
இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான். ஓடாதேவாராய். 2. 

154: 
பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம் 
ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன் 
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன் 
வாய்த்தபுகழ்மணிவண்ணா. மஞ்சனமாடநீவாராய். 3. 

155: 
கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து 
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே. 
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும் 
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே. நீராடவாராய். 4. 

156: 
அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து 
சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ. 
செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர் 
சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான். இங்கேவாராய். 5. 

157: 
எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி 
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே. 
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே 
வண்ணம்அழகியநம்பீ. மஞ்சனமாடநீவாராய். 6. 

158: 
கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய் 
பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேன்எம்பிரானே. 
சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே 
மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய். 7. 

159: 
கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து 
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும் 
நின்திறத்தேனல்லன்நம்பீ. நீபிறந்ததிருநல்நாள் 
நன்றுநீநீராடவேண்டும் நாரணா. ஓடாதேவாராய். 8. 

160: 
பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி 
காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர் 
நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும் 
மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய். 9. 

161: 
கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து 
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை 
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல் 
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. (2) 10. 

ஐந்தாம் திருமொழி – பின்னைமணாளனை 
(கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) 

கலித்தாழிசை 

162: 
பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை 
முன்னையமரர் முதல்தனிவித்தினை 
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட 
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய். 
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2) 1. 

163: 
பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம் 
மாயச்சகடும் மருதும்இறுத்தவன் 
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல் 
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய். 
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 2. 

164: 
திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த 
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும் 
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம் 
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய். 
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 3. 

165: 
பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு 
கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு 
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட 
பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய். 
பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய். 4. 

166: 
கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை 
பற்றியெறிந்த பரமன்திருமுடி 
உற்றனபேசி நீஓடித்திரியாதே 
அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய். 
ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய். 5. 

167: 
கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை 
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால் 
விழிக்குமளவிலே வேரறுத்தானை 
குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய். 
கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய். 6. 

168: 
பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும் 
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே 
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர் 
வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய். 
மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய். 7. 

169: 
உந்தியெழுந்த உருவமலர்தன்னில் 
சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன் 
கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி 
தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய். 
தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய். 8. 

170: 
மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த 
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன் 
பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து 
பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய். 
பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய். 9. 

தரவு கொச்சகக்கலிப்பா 

171: 
கண்டார்பழியாமே அக்காக்காய். கார்வண்ணன் 
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல் 
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல் 
கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2) 10. 

ஆறாம் திருமொழி – வேலிக்கோல்
(காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) 

கலித்தாழிசை 

172: 
வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி 
தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு 
பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு 
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா 
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. (2) 1. 

173: 
கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும் 
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன் 
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல் 
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா 
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா. 2. 

174: 
கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான் 
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான் 
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி 
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா 
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 3. 

175: 
ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன் 
துன்றுமுடியான் துரியோதனன்பக்கல் 
சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு 
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா 
கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா. 4. 

176: 
சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல் 
ஊரொன்றுவேண்டிப் பெறாதஉரோடத்தால் 
பாரொன்றிப் பாரதம்கைசெய்து பார்த்தற்குத் 
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா 
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 5. 

177: 
ஆலத்திலையான் அரவினணைமேலான் 
நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான் 
பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த 
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா 
குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா. 6. 

178: 
பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில் 
உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட அக் 
கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை 
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா 
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா. 7. 

179: 
மின்னிடைச் சீதைபொருட்டா இலங்கையர் 
மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ 
தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வளைத்திட்ட 
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா 
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா. 8. 

180: 
தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து 
மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு 
என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற 
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா 
வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா. 9. 

தரவு கொச்சகக்கலிப்பா 

181: 
அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று 
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன் 
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர் 
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே. 10. 

ஏழாம் திருமொழி – ஆனிரை 
(கண்ணனைப் பூச்சூட அழைத்தல்) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

182: 
ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய் 
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட 
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப 
தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2) 1. 

183: 
கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள் 
உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய். 
திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய். 
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய். 2. 

184: 
மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு 
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி 
நிச்சலும்தீமைகள்செய்வாய். நீள்திருவேங்கடத்துஎந்தாய். 
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய். 3. 

185: 
தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே 
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற 
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே 
உருவமழகியநம்பீ. உகந்திவைசூட்டநீவாராய். 4. 

186: 
புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய். 
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய். 
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன் 
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய். 5. 

187: 
எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி. 
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய். 
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு 
பொருதுவருகின்றபொன்னே. புன்னைப்பூச்சூட்டவாராய். 6. 

188: 
குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே. 
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா. 
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய். 
குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய். 7. 

189: 
சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய். 
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய். 
ஆமாறறியும்பிரானே. அணியரங்கத்தேகிடந்தாய். 
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய். இருவாட்சிப்பூச்சூட்டவாராய். 8. 

190: 
அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய். 
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள்மணவாளா. 
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய். 
கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய். 9. 

191: 
செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி 
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று 
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை 
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2) 10. 

எட்டாம் திருமொழி – இந்திரனோடு
(கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

192: 
இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம் 
மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார் 
சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய். 
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். (2) 1. 

193: 
கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம் 
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய். 
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய். 
நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய். 2. 

194: 
செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு 
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய். 
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய். 
இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான். காப்பிடவாராய். 3. 

195: 
கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று 
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார் 
கண்ணனே. வெள்ளறைநின்றாய். கண்டாரோடேதீமைசெய்வாய். 
வண்ணமேவேலையதொப்பாய். வள்ளலே. காப்பிடவாராய். 4. 

196: 
பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார் 
எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான். நீஇங்கேவாராய் 
நல்லார்கள்வெள்ளறைநின்றாய். ஞானச்சுடரே. உன்மேனி 
சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய். 5. 

197: 
கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை 
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு 
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய். 
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே. காப்பிடவாராய். 6. 

198: 
கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த 
பிள்ளையரசே. நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை 
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய். 
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய். 7. 

199: 
இன்பமதனைஉயர்த்தாய். இமையவர்க்குஎன்றும்அரியாய். 
கும்பக்களிறட்டகோவே. கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே. 
செம்பொன்மதிள்வெள்ளறையாய். செல்வத்தினால்வளர்பிள்ளாய். 
கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய். 8. 

200: 
இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார் 
தருக்கேல்நம்பி. சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள் 
திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய். 
உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய். 9. 

201: 
போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை 
மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம் 
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை 
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே. (2) 10. 

ஒன்பதாம் திருமொழி – வெண்ணெய்விழுங்கி 
(வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) 

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

202: 
வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை 

வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும் 
கண்ணபிரான்கற்றகல்விதன்னைக் 

காக்ககில்லோம்உன்மகனைக்காவாய் 
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை 

புரைபுரையால்இவைசெய்யவல்ல 
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற 

அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். (2) 1. 

203: 
வருகவருகவருகஇங்கே 

வாமனநம்பீ. வருகஇங்கே 
கரியகுழல்செய்யவாய்முகத்துக் 

காகுத்தநம்பீ. வருகஇங்கே 
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய். 

அஞ்சனவண்ணா. அசலகத்தார் 
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன் 

பாவியேனுக்குஇங்கேபோதராயே. 2. 

204: 
திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு 

தேக்கமொன்றுமிலன்தேசுடையன் 
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய் 

உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான் 
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது 

தான் வழக்கோ? அசோதாய். 
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய் 

வாழவொட்டான்மதுசூதனனே. 3. 

205: 
கொண்டல்வண்ணா. இங்கேபோதராயே 

கோயிற்பிள்ளாய். இங்கேபோதராயே 
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த 

திருநாரணா. இங்கேபோதராயே 
உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி 

ஓடிஅகம்புகஆய்ச்சிதானும் 
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக் 

கண்ணபிரான்கற்றகல்விதானே. 4. 

206: 
பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப் 

பல்வளையாள்என்மகளிருப்ப 
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று 

இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன் 
சாளக்கிராமமுடையநம்பி 

சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான் 
ஆலைக்கரும்பின்மொழியனைய 

அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். 5. 

207: 
போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய் 

போதரேனென்னாதேபோதர்கண்டாய் 
ஏதேனும்சொல்லிஅசலகத்தார் 

ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன் 
கோதுகலமுடைக்குட்டனேயா. 

குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா. 
வேதப்பொருளே. என்வேங்கடவா. 

வித்தகனே. இங்கேபோதராயே. 6. 

208: 
செந்நெலரிசிசிறுபருப்புச் 

செய்த அக்காரம்நறுநெய்பாலால் 
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன் 

பண்டும்இப்பிள்ளைபரிசறிவன் 
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி 

எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான் 
உன்மகன்தன்னையசோதைநங்காய். 

கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே. 7. 

209: 
கேசவனே. இங்கேபோதராயே 

கில்லேனென்னாதுஇங்கேபோதராயே 
நேசமிலாதாரகத்திருந்து 

நீவிளையாடாதேபோதராயே 
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும் 

தொண்டரும்நின்றவிடத்தில்நின்று 
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய் 

தாமோதரா. இங்கேபோதராயே. 8. 

210: 
கன்னலிலட்டுவத்தோடுசீடை 

காரெள்ளினுண்டைகலத்திலிட்டு 
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன் 

இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான் 
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப் 

பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான் 
உன்மகன்தன்னையசோதைநங்காய். 

கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே. 9. 

211: 
சொல்லிலரசிப்படுதிநங்காய். 

சுழலுடையன்உன்பிள்ளைதானே 
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக் 

கையில்வளையைக்கழற்றிக்கொண்டு 
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற 

அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து 
நல்லனநாவற்பழங்கள்கொண்டு 

நானல்லேனென்றுசிரிக்கின்றானே. 10. 

212: 
வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ் 

வருபுனல்காவிரித்தென்னரங்கன் 
பண்டவன்செய்தகிரீடையெல்லாம் 

பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல் 
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார் 

கோவிந்தன்தன்அடியார்களாகி 
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார் 

இணையடிஎன்தலைமேலனவே. (2) 11. 

பத்தாம் திருமொழி – ஆற்றிலிருந்து
(ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) 

கலித்தாழிசை 

213: 
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை 
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு 
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு 
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும் 
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2) 1. 

214: 
குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ 
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த 
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு 
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும் 
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும். 2. 

215: 
தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி 
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து 
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு 
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும் 
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். 3. 

216: 
தேனுகனாவி செகுத்து பனங்கனி 
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால் 
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து 
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும் 
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும். 4. 

217: 
ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு 
பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு 
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு 
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும் 
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும். 5. 

218: 
தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய் 
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி 
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர் 
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும் 
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். 6. 

219: 
மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று 
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை 
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே 
தாவடியிட்டானால்இன்றுமுற்றும் 
தரணியளந்தானால்இன்றுமுற்றும். 7. 

220: 
தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய் 
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண் 
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய் 
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும் 
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும். 8. 

221: 
வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும் 
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி 
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை 
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும் 
தரணியிடந்தானால்இன்றுமுற்றும். 9. 

தரவு கொச்சகக்கலிப்பா 

222: 
அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு 
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட 
அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல் 
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2) 10. 


——————————————————————————–
மூன்றாம்பத்து 

முதல்திருமொழி – தன்னேராயிரம் 
(யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் 
கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

223: 
தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான் 
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும் 
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே. 
அன்னே. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. (2) 1. 

224: 
பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால் 
வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து 
மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த 
அன்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 2. 

225: 
கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி 
பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய் 
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார் 
அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 3. 

226: 
மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய் 
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய் 
பொய்யா. உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன் 
ஐயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 4. 

227: 
முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி 
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி 
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற 
அப்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 5. 

228: 
கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக் கற்றாநிறைமண்டித்தின்ன 
விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே. 
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச் சூழ்வலைவைத்துத்திரியும் 
அரம்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 6. 

229: 
மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி 
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச் சுற்றும்தொழநின்றசோதி. 
பொருட்டாயமிலேன்எம்பெருமான். உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு 
அரட்டா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 7. 

230: 
வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து 
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய் 
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன். வாழ்வில்லை நந்தன் 
காளாய். உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 8. 

231: 
தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர் 
நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி 
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும் 
ஆயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 9. 

232: 
தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்கு 
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய் 
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன் 
அத்தா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 10. 

233: 
கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி 
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம் 
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல் 
ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே. 11. 

இரண்டாம் திருமொழி – அஞ்சனவண்ணனை 
(யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) 

கலிநிலைத்துறை 

234: 
அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை 
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே 
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின் 
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2) 1. 

235: 
பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில் 
சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே 
கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின் 
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 2. 

236: 
நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும் 
பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே 
கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின் 
என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே. 3. 

237: 
வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட 
பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே 
கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின் 
எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே. 4. 

238: 
அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய் 
கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே 
எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின் 
தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 5. 

239: 
மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய் 
படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே 
கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின் 
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 6. 

240: 
வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட 
துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே 
கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின் 
புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 7. 

241: 
பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் 
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான் 
பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் 
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே. 8. 

242: 
குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான் 
உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை 
கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின் 
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 9. 

243: 
என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை 
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய 
பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல் 
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. (2) 10. 

மூன்றாம் திருமொழி – சீலைக்குதம்பை 
(கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) 

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

244: 
சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ 
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும் 
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர் 
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. (2) 1. 

245: 
கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம் 
மன்னியசீர்மதுசூதனா. கேசவா. பாவியேன்வாழ்வுகந்து 
உன்னைஇளங்கன்றுமேய்க்கச் சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன் 
என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா. 2. 

246: 
காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூச் 
சூடிவரிகின்றதாமோதரா. கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு 
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா. நீராட்டமைத்துவைத்தேன் 
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான். 3. 

247: 
கடியார்பொழிலணிவேங்கடவா. கரும்போரேறே. நீயுகக்கும் 
குடையும்செருப்பும்குழலும்தருவிக்கக் கொள்ளாதேபோனாய்மாலே. 
கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல 
அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான். 4. 

248: 
பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே. 
எஞ்சிற்றாயர்சிங்கமே. சீதைமணாளா. சிறுக்குட்டச்செங்கண்மாலே. 
சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய் 
கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்துக் கலந்துடன்வந்தாய்போலும். 5. 

249: 
அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா. நீபொய்கைபுக்கு 
நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன் 
என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய்? ஏதுமோரச்சமில்லை 
கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய். 6. 

250: 
பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா. உன்மேல் 
கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை 
சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும் 
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே. 7. 

251: 
கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு 
கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும் 
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது 
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8. 

252: 
திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன் 
பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டுகூறுவித்தேன் 
கண்ணாலம்செய்யக் கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன் 
கண்ணா. நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு. 9. 

253: 
புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை 
கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம் 
செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல் 
கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. (2) 10. 

நான்காம் திருமொழி – தழைகளும் 
(காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) 

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

254: 
தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும் 

தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி 
குழல்களும்கீதமுமாகிஎங்கும் 

கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு 
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி 

மங்கைமார்சாலகவாசல்பற்றி 
நுழைவனர்நிற்பனராகி எங்கும் 

உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே. (2) 1. 

255: 
வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு 

வசையறத்திருவரைவிரித்துடுத்து 
பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்திப் 

பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே 
முல்லைநல்நறுமலர்வேங்கைமலர் 

அணிந்து பல்லாயர்குழாம்நடுவே 
எல்லியம்போதாகப்பிள்ளைவரும் 

எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே. 2. 

256: 
சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும் 

மேலாடையும்தோழன்மார்கொண்டோ ட 
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி 

ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம் 
வருகையில்வாடியபிள்ளைகண்ணன் 

மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள் 
அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள் 

அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே. 3. 

257: 
குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான் 

கோவலனாய்க்குழலூதியூதி 
கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு 

கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு 
என்றும்இவனையொப்பாரைநங்காய் 

கண்டறியேன்ஏடி. வந்துகாணாய் 
ஒன்றும்நில்லாவளைகழன்று 

துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே. 4. 

258: 
சுற்றிநின்றுஆயர்தழைகளிடச் 

சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து 
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே 

பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின் 
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன் 

மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால் 
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக் 

கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. 5. 

259: 
சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல் 

திருத்தியகோறம்பும்திருக்குழலும் 
அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ் 

வருமாயரோடுஉடன்வளைகோல்வீச 
அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை 

அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில் 
பந்துகொண்டானென்றுவளைத்துவைத்துப் 

பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ. 6. 

260: 
சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ் 

தன்திருமேனிநின்றொளிதிகழ 
நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து 

பல்லாயர்குழாம்நடுவே 
கோலச்செந்தாமரைக்கண்மிளிரக் 

குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு 
ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை 

அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே. 7. 

261: 
சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித் 

திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால் 
அந்தரமின்றித்தன்னெறிபங்கியை 

அழகியநேத்திரத்தாலணிந்து 
இந்திரன்போல்வருமாயப்பிள்ளை 

எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன 
சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன் 

துகிலொடுசரிவளைகழல்கின்றதே. 8. 

262: 
வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து 

மல்லிகைவனமாலைமௌவல்மாலை 
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத் 

தீங்குழல்வாய்மடுத்தூதியூதி 
அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை 

அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு 
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர் 

வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே. 9. 

263: 
விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ 

மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே 
கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு 

இளவாய்க்கன்னிமார்காமுற்ற 
வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன் 

விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் 
பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார் 

பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 10. 

ஐந்தாம் திருமொழி – அட்டுக்குவி 
(கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை 
தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) 

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

264: 
அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும் 

தயிர்வாவியும்நெய்யளறும்அடங்கப் 
பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த 

பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை 
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை 

வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர் 
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. (2) 1. 

265: 
வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன் 

வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு 
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப 

மதுசூதன்எடுத்துமறித்தமலை 
இழவுதரியாததோரீற்றுப்பிடி 

இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும் 
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 2. 

266: 
அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும் 

ஆனாயரும்ஆநிரையும்அலறி 
எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப 

இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை 
தம்மைச்சரணென்றதம்பாவையரைப் 

புனமேய்கின்றமானினம்காண்மினென்று 
கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 3. 

267: 
கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக் 

கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல் 
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு 

அமரர்பெருமான்கொண்டுநின்றமலை 
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக் 

கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும் 
குடவாய்ப்படநின்றுமழைபொழியும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 4. 

268: 
வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல் 

அறையோ. வந்துவாங்குமினென்பவன்போல் 
ஏனத்துருவாகியஈசன்எந்தை 

இடவனெழவாங்கியெடுத்தமலை 
கானக்களியானைதன்கொம்பிழந்து 

கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து 
கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 5. 

269: 
செப்பாடுடையதிருமாலவன் தன் 

செந்தாமரைக்கைவிரலைந்தினையும் 
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள் 

காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை 
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி 

இலங்குமணிமுத்துவடம்பிறழ 
குப்பாயமெனநின்றுகாட்சிதரும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 6. 

270: 
படங்கள்பலவுமுடைப்பாம்பரையன் 

படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல் 
தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத் 

தாமோதரன்தாங்குதடவரைதான் 
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த 

அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை 
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 7. 

271: 
சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச் 

சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு 
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல் 

நாராயணன்முன்முகம்காத்தமலை 
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர் 

இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய 
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 8. 

272: 
வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன் 

வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை 
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில் 

தாமோதரன்தாங்குதடவரைதான் 
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள் 

முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை 
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 9. 

273: 
கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள் 

கோலமும்அழிந்திலவாடிற்றில 
வடிவேறுதிருவுகிர்நொந்துமில 

மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம் 
முடியேறியமாமுகிற்பல்கணங்கள் 

முன்னெற்றிநரைத்தனபோல எங்கும் 
குடியேறியிருந்துமழைபொழியும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 10. 

274: 
அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு 

அரவப்பகையூர்தியவனுடைய 
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும் 

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல் 
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்த் 

திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும் 
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார் 

பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 11. 

ஆறாம் திருமொழி – நாவலம் 
(கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 

275: 
நாவலம்பெரியதீவினில்வாழும் 

நங்கைமீர்காள். இதுஓரற்புதம்கேளீர் 
தூவலம்புரியுடையதிருமால் 

தூயவாயில்குழலோசைவழியே 
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை 

குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும் 
காவலும்கடந்துகயிறுமாலையாகி 

வந்துகவிழ்ந்துநின்றனரே. (2) 1. 

276: 
இடவணரைஇடத்தோளொடுசாய்த்து 

இருகைகூடப்புருவம்நெரிந்தேற 
குடவயிறுபடவாய்கடைகூடக் 

கோவிந்தன்குழல்கொடுஊதினபோது 
மடமயில்களொடுமான்பிணைபோலே 

மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ 
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி 

ஒல்கியோடரிக்கணோடநின்றனரே. 2. 

277: 
வானிலவரசுவைகுந்தக்குட்டன் 

வாசுதேவன்மதுரைமன்னன் நந்த 
கோனிளவரசுகோவலர்குட்டன் 

கோவிந்தன்குழல்கொடுஊதினபோது 
வானிளம்படியர்வந்துவந்தீண்டி 

மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப 
தேனளவுசெறிகூந்தலவிழச் 

சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே. 3. 

278: 
தேனுகன்பிலம்பன்காளியனென்னும் 

தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி 
கானகம்படிஉலாவியுலாவிக் 

கருஞ்சிறுக்கன்குழலூதினபோது 
மேனகையொடுதிலோத்தமைஅரம்பை 

உருப்பசியரவர்வெள்கிமயங்கி 
வானகம்படியில்வாய்திறப்பின்றி 

ஆடல்பாடலவைமாறினர்தாமே. 4. 

279: 
முன்நரசிங்கமதாகி அவுணன் 

முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில் 
மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில் 

குழலினோசை செவியைப்பற்றிவாங்க 
நன்னரம்புடையதும்புருவோடு 

நாரதனும்தம்தம்வீணைமறந்து 
கின்னரமிதுனங்களும் தம்தம் 

கின்னரம்தொடுகிலோமென்றனரே. 5. 

280: 
செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன் 

தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம் 
நம்பரமன்இந்நாள்குழலூதக் 

கேட்டவர்கள் இடருற்றனகேளீர் 
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம் 

அமுதகீதவலையால்சுருக்குண்டு 
நம்பரமன்றென்றுநாணிமயங்கி 

நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே. 6. 

281: 
புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர் 

பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து 
அவையுள் நாகத்தணையான்குழலூத 

அமரலோகத்தளவும்சென்றிசைப்ப 
அவியுணாமறந்துவானவரெல்லாம் 

ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி 
செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து 

கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே. 7. 

282: 
சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் 

செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க 
குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் 

கோவிந்தன்குழல்கொடுஊதினபோது 
பறவையின்கணங்கள்கூடுதுறந்து 

வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப 
கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக் 

கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே. 8. 

283: 
திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன் 

செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே 
சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான் 

ஊதுகின்றகுழலோசைவழியே 
மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து 

மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர 
இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா 

எழுதுசித்திரங்கள்போலநின்றனவே. 9. 

284: 
கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து 

கட்டிநன்குடுத்தபீதகவாடை 
அருங்கலவுருவினாயர்பெருமான் 

அவனொருவன்குழலூதினபோது 
மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும் 

மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும் 
இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற 

பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே. 10. 

285: 
குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக் 

கோவிந்தனுடையகோமளவாயில் 
குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக் 

கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை 
குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன் 

விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார் 
குழலைவென்றகுளிர்வாயினராகிச் 

சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே. (2) 11. 

ஏழாம் திருமொழி – ஐயபுழுதி 
(திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு 
நற்றாய் இரங்கும் பாசுரம்) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

286: 
ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய் 
செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள் 
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள் 
பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. (2) 1. 

287: 
வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில 
சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி 
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி 
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 2. 

288: 
பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில் 
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால் 
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை 
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே. 3. 

289: 
ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி 
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்? 
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி 
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே. 4. 

290: 
நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள் 
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள் 
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை 
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5. 

291: 
பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும் 
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள் 
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும் 
வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6. 

292: 
பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள் 
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய் 
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள் 
வாசவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 7. 

293: 
காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும் 
கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும் 
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும் 
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 8. 

294: 
கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை 
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும் 
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள 
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9. 

295: 
பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே 
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள் 
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன் 
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே. 10. 

296: 
ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள் 
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை 
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன 
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2) 11. 

எட்டாம் திருமொழி – நல்லதோர் தாமரை 
(தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் 
பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

297: 
நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர 
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ 
இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன் 
மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? (2) 1. 

298: 
ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள் 
கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு 
நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை 
என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ? 2. 

299: 
குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி 
தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி 
அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு 
துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ? 3. 

300: 
ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால் 
திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான் 
பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை 
மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ? 4. 

301: 
தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை 
செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும் 
கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு 
இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ? 5. 

302: 
வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை 
கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ? 
நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து 
சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ? 6. 

303: 
அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை 
பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ? 
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து 
பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ? 7. 

304: 
குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ. 
நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன் 
இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி 
கடைகயிறேபற்றிவாங்கிக் கைதழும்பேறிடுங்கொலோ? 8. 

305: 
வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து 
கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ? 
ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை 
பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ? 9. 

306: 
மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு 
ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம் 
தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன 
தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே. (2) 10. 

ஒன்பதாம் திருமொழி – என்னாதன் 
(க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை 
இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) 

கலித்தாழிசை 

307: 
என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள் 
தன் நாதன்காணவே தண்பூமரத்தினை 
வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட 
என்னாதன்வன்மையைப்பாடிப்பற 
எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. (2) 1. 

308: 
என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான் 
தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி 
முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான் 
தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற 
தாசரதிதன்மையைப்படிப்பற. 2. 

309: 
உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு 
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து 
செருக்குற்றான் வீரம்சிதைய தலையைச் 
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற 
தேவகிசிங்கத்தைப்பாடிப்பற. 3. 

310: 
மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட 
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான். என்றுஅழ 
கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன 
சீற்றமிலாதானைப்பாடிப்பற 
சீதைமணாளனைப்பாடிப்பற. 4. 

311: 
பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து 
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு 
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த 
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற 
அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. 5. 

312: 
முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன் 
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த 
படியில்குணத்துப் பரதநம்பிக்கு அன்று 
அடிநிலையீந்தானைப்பாடிப்பற 
அயோத்தியர்கோமானைப்பாடிப்பற. 6. 

313: 
காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன் 
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து 
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன் 
தோள்வலிவீரமேபாடிப்பற 
தூமணிவண்ணனைப்பாடிப்பற. 7. 

314: 
தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம் 
நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடைச் 
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள் 
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற 
அயோத்திக்கரசனைப்பாடிப்பற. 8. 

315: 
மாயச்சகடமுதைத்து மருதிறுத்து 
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி 
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற 
ஆயர்களேற்றினைப்பாடிப்பற 
ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற. 9. 

316: 
காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு 
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும் 
நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த 
ஆராவமுதனைப்பாடிப்பற 
அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற. 10. 

தரவு கொச்சகக்கலிப்பா 

317: 
நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று 
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல் 
செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல் 
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. (2) 11. 

பத்தாம் திருமொழி – நெறிந்தகருங்குழல் 
(இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, 
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் 
கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) 

கலிவிருத்தம் 

318: 
நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன்விண்ணப்பம் 
செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது 
அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க 
செறிந்தசிலைகொடுதவத்தைச் சிதைத்ததும்ஓரடையாளம். (2) 1. 

319: 
அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம் 
சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே. 
எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில் 
மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம். 2. 

320: 
கலக்கியமாமனத்தனளாய்க் கைகேசிவரம்வேண்ட 
மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய 
குலக்குமரா. காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப 
இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம். 3. 

321: 
வாரணிந்தமுலைமடவாய். வைதேவீ. விண்ணப்பம் 
தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ. கேட்டருளாய் 
கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில் 
சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம். 4. 

322: 
மானமருமெல்நோக்கி. வைதேவீ. விண்ணப்பம் 
கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தகாலத்து 
தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப 
பால்மொழியாய். பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம். 5. 

323: 
சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட 
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி 
வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப 
அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம். 6. 

324: 
மின்னொத்த_ண்ணிடையாய். மெய்யடியேன்விண்ணப்பம் 
பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட 
நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக 
பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம். 7. 

325: 
மைத்தகுமாமலர்க்குழலாய். வைதேவீ. விண்ணப்பம் 
ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட 
அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான் 
இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே. 8. 

326: 
திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள் 
மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு 
ஒக்குமால்அடையாளம் அனுமான். என்றுஉச்சிமேல் 
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே. (2) 9. 

327: 
வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு 
சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம் 
பாராரும்புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான்பாடல்வல்லார் 
ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. (2) 10. 


——————————————————————————–
நான்காம்பத்து 

முதல் திருமொழி – கதிராயிரம் 

(ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) 
அறுசீர்க்கழிநெடிலடிய’சிரியவிருத்தம் 

328: 

கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன் 
எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் 
அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய் 
உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். (2) 1. 

329: 
நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம் 
ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் 
காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க 
வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். 2. 

330: 
கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய 
சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் 
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப 
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். 3. 

331: 
தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட 
மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன் 
ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும் 
வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். 4. 

332: 
நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால் 
சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல் 
வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு 
தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர். 5. 

333: 
பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க 
வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல் 
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை 
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். 6. 

334: 
வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் 
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் 
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று 
கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர். 7. 

335: 
நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே 
நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன் 
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை 
பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். 8. 

336: 
மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம் 
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் 
எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து 
வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். 9. 

337: 
கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து 
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை 
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும் 
பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. (2) 10. 

இரண்டாம் திருமொழி – அலம்பாவெருட்டா 
(திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) 

கலிநிலைத்துறை 

338: 
அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை 
குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை 
சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர் 
சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. (2) 1. 

339: 
வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை 
பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை 
எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி 
செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. 2. 

340: 
தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை 
தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை 
எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை 
அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. 3. 

341: 
ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம் 
கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை 
வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி 
தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 4. 

342: 
ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன் 
ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை 
கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன் 
திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. 5. 

343: 
ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை 
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை 
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும் 
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 6. 

344: 
மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல் 
முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை 
கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன் 
தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 7. 

345: 
குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச் 
சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை 
அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி 
சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 8. 

346: 
சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள் 
அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை 
இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான் 
சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. 9. 

347: 
எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார் 
விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை 
பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த் 
தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 10. 

348: 
மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை 
கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை 
விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல் 
கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. (2) 11. 

மூன்றாம் திருமொழி – உருப்பிணிநங்கை 
(திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 

கலிநிலைத்துறை 

349: 
உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற 
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை 
பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு 
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. (2) 1. 

350: 
கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும் 
வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை 
நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை 
செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. 2. 

351: 
மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து 
கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை 
புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று 
பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. 3. 

352: 
மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த 
காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை 
கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப் 
பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. 4. 

353: 
பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை 
அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை 
குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை 
நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. (2) 5. 

354: 
பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம் 
ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை 
பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக 
தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. 6. 

355: 
கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள் 
இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை 
கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம் 
இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. 7. 

356: 
எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய 
வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த 
அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று 
திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. 8. 

357: 
கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து 
மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை 
ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று 
ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9. 

358: 
ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக 
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை 
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும் 
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. (2) 10. 

359: 
மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை 
நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை 
மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில் 
மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. (2) 11. 

நான்காம் திருமொழி – நாவகாரியம் 
(முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், 
அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்) 

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

360: 
நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார் 
தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர் 
மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத அப் 
பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. (2) 1. 

361: 
குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய் 
செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் 
துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர் 
பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே. 2. 

362: 
வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும் 
திண்ணைசூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன்திருநாமங்கள் 
எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய் 
உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே. 3. 

363: 
உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள் 
நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர் 
நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர் 
பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ. 4. 

364: 
ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய் 
தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர் 
நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை 
பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே. 5. 

365: 
பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால் 
ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் 
நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய 
பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே. 6. 

366: 
குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து 
திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர் 
கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள் 
இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ. 7. 

367: 
நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும் 
தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர் 
குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள் 
விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே. 8. 

368: 
கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர் 
செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் 
நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால் 
எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே. 9. 

369: 
காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு 
தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் 
கேசவா. புருடோ த்தமா. கிளர்சோதியாய். குறளா. என்று 
பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே. 10. 

370: 
சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் 
ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும் 
கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல் 
ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. (2) 11. 

ஐந்தாம் திருமொழி – ஆசைவாய் 
(பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு 
கிதோபதேசம் செய்தல்) 

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

371: 
ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி 

அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி 
வாசவார்குழலாளென்றுமயங்கி 

மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே 
கேசவா. புருடோ த்தமா. என்றும் 

கேழலாகியகேடிலீ. என்றும் 
பேசுவாரவர்எய்தும்பெருமை 

பேசுவான்புகில்நம்பரமன்றே. (2) 1. 

372: 
சீயினால்செறிந்தேறியபுண்மேல் 

செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும் 
ஈயினால்அரிப்புண்டுமயங்கி 

எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம் 
வாயினால்நமோநாரணாவென்று 

மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி 
போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும் 

பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே. 2. 

373: 
சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில் 

சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து 
ஆர்வினவிலும்வாய்திறவாதே 

அந்தகாலம்அடைவதன்முன்னம் 
மார்வமென்பதோர்கோயிலமைத்து 

மாதவனென்னும்தெய்வத்தைநட்டி 
ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு 

அரவதண்டத்தில்உய்யலுமாமே. 3. 

374: 
மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து 

மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி 
காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக் 

கண்ணுறக்கமதாவதன்முன்னம் 
மூலமாகியஒற்றையெழுத்தை 

மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி 
வேலைவண்ணனைமேவுதிராகில் 

விண்ணகத்தினில்மேவலுமாமே. 4. 

375: 
மடிவழிவந்துநீர்புலன்சோர 

வாயிலட்டியகஞ்சியும்மீண்டே 
கடைவழிவாரக்கண்டமடைப்பக் 

கண்ணுறக்கமதாவதன்முன்னம் 
தொடைவழிஉம்மைநாய்கள்கவரா 

சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார் 
இடைவழியில்நீர்கூறையும்இழவீர் 

இருடீகேசனென்றேத்தவல்லீரே. 5. 

376: 
அங்கம்விட்டவையைந்துமகற்றி 

ஆவிமூக்கினில்சோதித்தபின்னை 
சங்கம்விட்டவர்கையைமறித்துப் 

பையவேதலைசாய்ப்பதன்முன்னம் 
வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை 

மதுசூதனனைமார்பில் 
தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம் 

சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே. 6. 

377: 
தென்னவன்தமர்செப்பமிலாதார் 

சேவதக்குவார்போலப்புகுந்து 
பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப் 

பின்முன்னாகஇழுப்பதன்முன்னம் 
இன்னவன்இனையானென்றுசொல்லி 

எண்ணிஉள்ளத்திருளறநோக்கி 
மன்னவன்மதுசூதனென்பார் 

வானகத்துமன்றாடிகள்தாமே. 7. 

378: 
கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து 

குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து 
பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு 

நரிப்படைக்குஒருபாகுடம்போலே 
கோடிமூடியெடுப்பதன்முன்னம் 

கௌத்துவமுடைக்கோவிந்தனோடு 
கூடியாடியஉள்ளத்தரானால் 

குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே. 8. 

379: 
வாயொருபக்கம்வாங்கிவலிப்ப 

வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற 
தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம் 

தாரமும்ஒருபக்கம்அலற்ற 
தீஓருபக்கம்சேர்வதன்முன்னம் 

செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற 
மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு 

அரவதண்டத்தில்உய்யலுமாமே. 9. 

380: 
செத்துப்போவதோர்போதுநினைந்து 

செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல் 
பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப் 

பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன் 
சித்தம்நன்கொருங்கித்திருமாலைச் 

செய்தமாலைஇவைபத்தும்வல்லார் 
சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல் 

சென்றசிந்தைபெறுவர்தாமே. (2) 10. 

ஆறாம் திருமொழி – காசுங்கறையுடை 
(பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை 
இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) 

கலித்துறை 

381: 
காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும் 
ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள். 
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ 
நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2) 1. 

382: 
அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால் 
மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள். 
செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால் 
நங்கைகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 2. 

383: 
உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து 
எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்? 
பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே 
நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 3. 

384: 
மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை 
மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை 
வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால் 
நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 4. 

385: 
மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை 
மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை 
குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால் 
நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 5. 

386: 
நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு 
கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே 
சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று 
நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 6. 

387: 
மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு 
எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள். 
கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே 
நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 7. 

388: 
நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால் 
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம் 
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால் 
நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 8. 

389: 
ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள் 
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு 
கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ 
நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 9. 

390: 
சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய 
வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த 
ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர் 
பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. (2) 10. 

ஏழாம் திருமொழி – தங்கையைமூக்கும் 
(தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

391: 
தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய் 
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை 
கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும் 
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே. (2) 1. 

392: 
சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச் சந்திரன்வெங்கதிர்அஞ்ச 
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு 
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும் 
கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 2. 

393: 
அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு 
எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை 
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி 
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 3. 

394: 
இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை 
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான் 
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட 
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 4. 

395: 
உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும் 
மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு 
எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம் 
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 5. 

396: 
தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு 
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு 
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட 
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 6. 

397: 
விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி 
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு 
அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும் 
கற்பகமலரும்கலந்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 7. 

398: 
திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய் 
அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு 
நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு 
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே. 8. 

399: 
வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி 
இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை 
தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி 
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. (2) 9. 

400: 
மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை 
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை 
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான் 
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. (2) 10. 

401: 
பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல் 
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று 
தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு 
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே. (2) 11. 

எட்டாம் திருமொழி – மாதவத்தோன் 
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) 

தரவு கொச்சகக்கலிப்பா 

402: 
மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை 
ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர் 
தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும் 
போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. (2) 1. 

403: 
பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும் 
இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர் 
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார் 
சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2. 

404: 
மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார் 
உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர் 
திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை 
பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. 3. 

405: 
கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு 
ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய 
கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர் 
தேந்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே. 4. 

406: 
பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனை 
உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர் 
குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ் 
திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. 5. 

407: 
கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே 
ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர் 
தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து 
யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. 6. 

408: 
கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய 
பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர் 
தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு 
தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. 7. 

409: 
வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய் 
எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர் 
எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி 
மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. 8. 

410: 
குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல் 
நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர் 
குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி 
மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. 9. 

411: 
பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை 
செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல் 
திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு 
இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. (2) 10. 

ஒன்பதாம் திருமொழி – மரவடியை 
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

412: 
மரவடியைத்தம்பிக்குவான்பணையம் 

வைத்துப்போய்வானோர்வாழ 
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து 

உலகாண்டதிருமால்கோயில் 
திருவடிதன்திருவுருவும் 

திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று 
உருவுடையமலர்நீலம் 

காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே. (2) 1. 

413: 
தன்னடியார்திறத்தகத்துத் 

தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல் 
என்னடியார்அதுசெய்யார் 

செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும் 
மன்னுடையவிபீடணற்கா 

மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த 
என்னுடையதிருவரங்கற்கன்றியும் 

மற்றொருவர்க்குஆளாவரே? (2) 2. 

414: 
கருளுடையபொழில்மருதும் 

கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும் 
உருளுடையசகடரையும்மல்லரையும் 

உடையவிட்டுஓசைகேட்டான் 
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு 

ஏற்றிவைத்துஏணிவாங்கி 
அருள்கொடுத்திட்டுஅடியவரை 

ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே. 3. 

415: 
பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய 

துவரையென்னும் 
அதில்நாயகராகிவீற்றிருந்த 

மணவாளர்மன்னுகோயில் 
புதுநாண்மலர்க்கமலம் 

எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான் 
பொதுநாயகம்பாவித்து 

இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே. 4. 

416: 
ஆமையாய்க்கங்கையாய் 

ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய் 
நான்முகனாய்நான்மறையாய் 

வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான் 
சேமமுடைநாரதனார் 

சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் 
பூமருவிப்புள்ளினங்கள் 

புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே. 5. 

417: 
மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து 

அவர்களையேமன்னராக்கி 
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட 

உயிராளன்உறையும்கோயில் 
பத்தர்களும்பகவர்களும் 

பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும் 
சித்தர்களும்தொழுதிறைஞ்சத் 

திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே. 6. 

418: 
குறட்பிரமசாரியாய் 

மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி 
இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை 

கொடுத்துகந்தஎம்மான்கோயில் 
எறிப்புடையமணிவரைமேல் 

இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய் 
சிறப்புடையபணங்கள்மிசைச் 

செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே. 7. 

419: 
உரம்பற்றிஇரணியனை 

உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி 
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க 

வாயலரத்தெழித்தான்கோயில் 
உரம்பெற்றமலர்க்கமலம் 

உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட 
வரம்புற்றகதிர்ச்செந்நெல் 

தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே. 8. 

420: 
தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய் 

அரியாய்க்குறளாய் 
மூவுருவினிராமனாய்க் 

கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில் 
சேவலொடுபெடையன்னம் 

செங்கமலமலரேறிஊசலாடி 
பூவணைமேல்துதைந்தெழு 

செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே. 9. 

421: 
செருவாளும்புள்ளாளன்மண்ணாளன் 

செருச்செய்யும்நாந்தகமென்னும் 
ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன் 

விழுக்கையாளன் 
இரவாளன்பகலாளன்என்னையாளன் 

ஏழுலகப்பெரும்புரவாளன் 
திருவாளன்இனிதாகத் 

திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே. 10. 

422: 
கைந்நாகத்திடர்கடிந்த 

கனலாழிப்படையுடையான்கருதும்கோயில் 
தென்னாடும்வடநாடும்தொழநின்ற 

திருவரங்கம்திருப்பதியின்மேல் 
மெய்ந்நாவன்மெய்யடியான் 

விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார் 
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ் 

இணைபிரியாதிருப்பர்தாமே. (2) 11. 

பத்தாம் திருமொழி – துப்புடையாரை 
(அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே 
பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) 

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

423: 
துப்புடையாரைஅடைவதெல்லாம் 

சோர்விடத்துத்துணையாவரென்றே 
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன் 

ஆனைக்குநீஅருள்செய்தமையால் 
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது 

அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன் 
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன் 

அரங்கத்தரவணைப்பள்ளியானே. (2) 1. 

424: 
சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய் 

சங்கொடுசக்கரமேந்தினானே. 
நாமடித்துஎன்னைஅனேகதண்டம் 

செய்வதாநிற்பர்நமன்தமர்கள் 
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும் 

புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை 
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன் 

அரங்கத்தரவணைப்பள்ளியானே. 2. 

425: 
எல்லையில்வாசல்குறுகச்சென்றால் 

எற்றிநமன்தமர்பற்றும்போது 
நில்லுமினென்னும்உபாயமில்லை 

நேமியும்சங்கமும்ஏந்தினானே. 
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம் 

சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும் 
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும் 

அரங்கத்தரவணைப்பள்ளியானே. 3. 

426: 
ஒற்றைவிடையனும்நான்முகனும் 

உன்னையறியாப்பெருமையோனே. 
முற்றஉலகெல்லாம்நீயேயாகி 

மூன்றெழுத்தாயமுதல்வனேயா. 
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி 

அஞ்சநமன்தமர்பற்றலுற்ற 
அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும் 

அரங்கத்தரவணைப்பள்ளியானே. 4. 

427: 
பையரவினணைப் பாற்கடலுள் 

பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி. 
உய்யஉலகுபடைக்கவேண்டி 

உந்தியில்தோற்றினாய்நான்முகனை 
வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக் 

காலனையும்உடனேபடைத்தாய் 
ஐய. இனிஎன்னைக்காக்கவேண்டும் 

அரங்கத்தரவணைப்பள்ளியானே. 5. 

428: 
தண்ணெனவில்லைநமன்தமர்கள் 

சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர் 
மண்ணொடுநீரும்எரியும்காலும் 

மற்றும்ஆகாசமுமாகிநின்றாய். 
எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம் 

எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும் 
அண்ணலே. நீஎன்னைக்காக்கவேண்டும் 

அரங்கத்தரவணைப்பள்ளியானே. 6. 

429: 
செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற 

தேவர்கள்நாயகனே. எம்மானே. 
எஞ்சலிலென்னுடையின்னமுதே. 

ஏழுலகுமுடையாய். என்னப்பா. 
வஞ்சவுருவின்நமன்தமர்கள் 

வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது 
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும் 

அரங்கத்தரவணைப்பள்ளியானே. 7. 

430: 
நான்ஏதும்உன்மாயமொன்றறியேன் 

நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த 
ஊனேபுகேயென்றுமோதும்போது 

அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் 
வானேய்வானவர்தங்களீசா. 

மதுரைப்பிறந்தமாமாயனே. என் 
ஆனாய். நீஎன்னைக்காக்கவேண்டும் 

அரங்கத்தரவணைப்பள்ளியானே. 8. 

431: 
குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா. 

கோநிரைமேய்த்தவனே. எம்மானே. 
அன்றுமுதல் இன்றறுதியா 

ஆதியஞ்சோதிமறந்தறியேன் 
நன்றும்கொடியநமன்தமர்கள் 

நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது 
அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும் 

அரங்கத்தரவணைப்பள்ளியானே. 9. 

432: 
மாயவனைமதுசூதனனை 

மாதவனைமறையோர்களேத்தும் 
ஆயர்களேற்றினைஅச்சுதனை 

அரங்கத்தரவணைப்பள்ளியானை 
வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன் 

விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் 
தூயமனத்தனராகிவல்லார் 

தூமணிவண்ணனுக்காளர்தாமே. (2) 10. 


——————————————————————————–
ஐந்தாம் பத்து 

முதல் திருமொழி – வாக்குத்தூய்மை 

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

433: 
வாக்குத்தூய்மையிலாமையினாலே 

மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன் 
நாக்குநின்னையல்லால்அறியாது 

நானதஞ்சுவன்என்வசமன்று 
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று 

முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன் 
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர் 

காரணா. கருளக்கொடியானே. (2) 1. 

434: 
சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன் 

சங்குசக்கரமேந்துகையனே. 
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல் 

பொறுப்பது பெரியோர்கடனன்றே 
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால் 

வேறொருவரோடுஎன்மனம்பற்றாது 
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய் 

ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே. 2. 

435: 
நன்மைதீமைகளொன்றும்அறியேன் 

நாரணா. என்னும்இத்த்னையல்லால் 
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப் 

புகழ்வானன்றுகண்டாய்திருமாலே. 
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன் 

ஓவாதேநமோநாரணா. என்பன் 
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும் 

வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே. 3. 

436: 
நெடுமையால்உலகேழுமளந்தாய். 

நின்மலா. நெடியாய். அடியேனைக் 
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா 

கூறைசோறுஇவைவேண்டுவதில்லை 
அடிமையென்னுமக்கோயின்மையாலே 

அங்கங்கேஅவைபோதரும்கண்டாய் 
கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை 

கோத்தவன்தளைகோள்விடுத்தானே. 4. 

437: 
தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை 

துடவையும்கிணறும்இவையெல்லாம் 
வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே 

வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன் 
நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது 

நச்சுவார்பலர்கேழலொன்றாகி 
கோட்டுமண்கொண்டகொள்கையினானே. 

குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே. 5. 

438: 
கண்ணா. நான்முகனைப்படைத்தானே. 

காரணா. கரியாய். அடியேன்நான் 
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை 

ஓவாதேநமோநாரணாவென்று 
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம 

வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம் 
நண்ணாநாள் அவைதத்துறுமாகில் 

அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே. 6. 

439: 
வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை 

மெத்தையாகவிரித்து அதன்மேலே 
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம் 

காணலாங்கொல் என்றாசையினாலே 
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி 

உரோமகூபங்களாய் கண்ணநீர்கள் 
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன் 

சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே. 7. 

440: 
வண்ணமால்வரையேகுடையாக 

மாரிகாத்தவனே. மதுசூதா. 
கண்ணனே. கரிகோள்விடுத்தானே. 

காரணா. களிறட்டபிரானே. 
எண்ணுவாரிடரைக்களைவானே. 

ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே. 
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும் 

நன்மையேஅருள்செய்எம்பிரானே. 8. 

441: 
நம்பனே. நவின்றேத்தவல்லார்கள் 

நாதனே. நரசிங்கமதானாய். 
உம்பர்கோனுலகேழும்அளந்தாய் 

ஊழியாயினாய். ஆழிமுன்னேந்தி 
கம்பமாகரிகோள்விடுத்தானே. 

காரணா. கடலைக்கடைந்தானே. 
எம்பிரான். என்னையாளுடைத்தேனே. 

ஏழையேனிடரைக்களையாயே. 9. 

442: 
காமர்தாதைகருதலர்சிங்கம் 

காணவினியகருங்குழல்குட்டன் 
வாமனன்என்மரகதவண்ணன் 

மாதவன்மதுசூதனன்தன்னை 
சேமநன்கமரும்புதுவையர்கோன் 

விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும் 
நாமமென்றுநவின்றுரைப்பார்கள் 

நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. (2) 10. 

இரண்டாம் திருமொழி – நெய்க்குடத்தை 
(தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே 
விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 

443: 
நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் 
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் 
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் 
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 1. 

444: 
சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி 
வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார் 
முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன் 
பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே. 2. 

445: 
வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி 
கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி 
எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் 
பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 3. 

446: 
மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் 
இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் 
சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் 
பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 4. 

447: 
மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே 
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி 
மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர். 
பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5. 

448: 
உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் 
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் 
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் 
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6. 

449: 
கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி 
அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை 
வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி 
பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 7. 

450: 
ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே 
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து 
போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில் 
பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 8. 

451: 
உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே. 
அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே. 
இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள். 
பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். (2) 9. 

452: 
அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் 
அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து 
பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை 
பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. (2) 10. 

மூன்றாம் திருமொழி – துக்கச்சுழலையை 
(திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 

453: 
துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து 
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ? 
மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில் 
சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். (2) 1. 

454: 
வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால் 
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை 
அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று 
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய். 2. 

455: 
உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன் 
தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய் 
புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று 
இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய். (2) 3. 

456: 
காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன் 
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன் 
தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று 
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 4. 

457: 
காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல் 
மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா 
மாலுகளாநிற்கும்என்மனனே. உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன் 
சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய். 5. 

458: 
எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும் 
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை 
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிரத் 
திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய். 6. 

459: 
அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால் 
இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய் 
சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும் 
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 7. 

460: 
எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே 
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன் 
மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய். 
சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய். 8. 

461: 
அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் 
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? 
சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால் 
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 9. 

462: 
சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள் 
நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய் 
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன் 
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. (2) 10. 

நாலாம் திருமொழி – சென்னியோங்கு 
(எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார் 
தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்) 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 

463: 
சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகு 
தன்னைவாழநின்றநம்பீ. தாமோதரா. சதிரா. 
என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு 
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2) 1. 

464: 
பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின் 
பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால் 
இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால் 
அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. 2. 

465: 
எம்மனா. என்குலதெய்வமே. என்னுடையநாயகனே. 
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்? 
நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம் 
சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே. 3. 

466: 
கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல் 
உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன் 
கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா 
தடவரைத்தோள்சக்கரபாணீ. சார்ங்கவிற்சேவகனே. 4. 

467: 
பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல் 
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன் 
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன் 
என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. 5. 

468: 
உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம் 
என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன் 
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ. 
என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே? 6. 

469: 
பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல் 
திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய் 
மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய். என்றென்றுஉன்வாசகமே 
உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. 7. 

470: 
அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என் 
மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான். 
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக 
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. 8. 

471: 
பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் 
மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ. 
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று 
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. (2) 9. 

472: 
தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல் 
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி. 
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும் 
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. (2) 10. 

473: 
வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே 
கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை 
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை 
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. (2) 11. 

பெரியாழ்வார் திருவடிகளே சரணம். 


——————————————————————————–
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 474- 947) 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 


அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் 
பன்னு திருப்பாவைப் பல்பதியம் 
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை 
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு 

சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை 
பாடி அருளவல்ல பல்வளையாய் 
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம் 
நாங்கடவா வண்ணமே நல்கு. 

474: 
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் 

கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் 
நாராயணனே நமக்கே பறை தருவான் 

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் 

475: 
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் 

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் 
பையத் துயின்ற பரமனடி பாடி 

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி 
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் 

செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி 

உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய். 

476: 
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் 
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து 

ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப் 
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் 

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி 
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் 

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் 

477: 
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் 

ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி 
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் 

பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில் 
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து 

தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் 
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் 

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 

478: 
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் 

தூய பெரு நீர் யமுனைத் துறைவனை 
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் 

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் 
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது 

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் 

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். 

479: 
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் 

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ 
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு 

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி 
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை 

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் 
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் 

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் 

480: 
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து 

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே 
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து 

வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் 
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ 

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி 
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ 

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் 

481: 
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு 

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் 
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் 

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய 
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு 

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய 
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் 

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய் 

482: 
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் 

தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும் 
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய் 

மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் 
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ 

ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ 
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று 

நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய் 

483: 
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய். 

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் 
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் 

போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் 
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும் 

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ 
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே 

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். 

484: 
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து 

செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் 
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே 

புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் 
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் 

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட 
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ 

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய் 

485: 
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 

நினைத்து முலை வழியே நின்று பால் சோர 
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் 

பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச் 
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற 

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் 
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம் 

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய் 

486: 
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப் 
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் 

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று 
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் 

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே 
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால் 

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். 

487: 
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் 

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் 
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் 

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் 
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் 

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் 
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். 

488: 
எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ 

சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன் 
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் 

வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை 

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் 
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய் 

489: 
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய 

கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண 
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய் 

ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை 
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் 

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் 
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ 

நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய் 

490: 
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் 

எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் 
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே 

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் 
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த 

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் 
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா 

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய். 

491: 
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் 

நந்தகோபன் மருமகளே நப்பின்னாய் 
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் 

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் 
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் 

பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச் 
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப 

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 

492: 
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் 

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக் 
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் 

வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் 
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை 

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் 
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் 

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய் 

493: 
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று 

கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய் 
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு 

வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் 
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் 

நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் 
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை 

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் 

494: 
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப 

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் 
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் 

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் 
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் 

மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் 
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே 

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் 

495: 
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான 

பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே 
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் 

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே 
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ 

திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல் 
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் 

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் 

496: 
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் 

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து 
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி 

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் 
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் 

கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய 
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த 

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் 

497: 
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி 

சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி 
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி 

கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி 
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி 
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் 

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் 

498: 
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் 

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் 
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த 

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் 
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை 

அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் 
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி 

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 

499: 
மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் 

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் 
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன 

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே 
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே 

சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே 
கோல விளக்கே கொடியே விதானமே 

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் 

500: 
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் 

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் 
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் 

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே 
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் 

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு 
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் 

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் 

501: 
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் 

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப் 
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் 

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு 
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது 

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை 
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே 

இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் 

502: 
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் 

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ 

குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா 

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு 
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் 

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் 

503: 
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை 

திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி 
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் 

பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை- 
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன 

இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் 
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். 

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர் 

சோதி மணி மாடம் தோன்றும் ஊர் 
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர் 

வில்லிபுத்தூர் வேதக் கோனூர் 
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும் 

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் 
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை 

வையம் சுமப்பது வம்பு. 

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே 

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே 
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே 

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே 
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே 

உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே 
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே 

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே 

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். மங்களம் 

——————————————————————————–

ஸ்ரீ: 
ஸ்ரீமதே ராமானுஜாய நம: 

நாச்சியார் திருமொழித் தனியன்கள் 

திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது 

நேரிசை வெண்பா 

அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் – மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு. 

கட்டளைக் கலித்துறை 

கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே. 


ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி 


1: தையொரு திங்கள் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

504: 
தையொரு திங்களும் தரைவிளக்கித் 

தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள், 
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து 

அழகினுக் கலங்கரித் தனங்கதேவா, 
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி 

உன்னையு மும்பியை யும்தொழுதேன், 
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை 

வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. (2) 1 

505: 
வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து 

வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து, 
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து 

முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா, 
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு 

கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி, 
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் 

இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2 

506: 
மத்தநன் னறுமலர் முருக்கமலர் 

கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி, 
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து 

வாசகத் தழித்துன்னை வைதிடாமே, 
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு 

கோவிந்த னென்பதோர் பேரேழுதி, 
வித்தகன் வேங்கட வாணனென்னும் 

விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3 

507: 
சுவரில் புராணநின் பேரேழுதிச் 

சுறவநற் கொடிகளும் துரங்கங்களும், 
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும் 

காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா, 
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும் 

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள், 
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் 

தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4 

508: 
வானிடை வாழுமவ் வானவர்க்கு 

மறையவர் வேள்வியில் வகுத்தஅவி, 
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து 

கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப, 
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று 

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள், 
மானிட வர்க்கென்று பேச்சுப்படில் 

வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5 

509: 
உருவுடை யாரிளை யார்கள்நல்லார் 

ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல் 
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள் 

திருந்தவே நோற்கின்றேன் காமதேவா, 
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் 

கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத் 
திருவுடை முகத்தினில் திருக்கண்களால் 

திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். 6 

510: 
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் 

கட்டி யரிசி யவலமைத்து, 
வாயுடை மறையவர் மந்திரத்தால் 

மன்மத னே.உன்னை வணங்குகின்றேன், 
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் 

திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம், 
சாயுடை வயிறுமென் தடமுலையும் 

தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7 

511: 
மாசுடை யுடம்பொடு தலையுலறி 

வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு, 
தேசுடை திறலுடைக் காமதேவா. 

நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய், 
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் 

பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம் 
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் 

என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8 

512: 
தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் 

தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன், 
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே 

பணிசெய்து வாழப் பெறாவிடில்நான், 
அழுதழு தலமந்தம் மாவழங்க 

ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய், 
உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து 

ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9 

513: 
கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக் 

கழலிணை பணிந்தங்கோர் கரியலற, 
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த 

மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று, 
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் 

புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை, 
விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார் 

விண்ணவர் கோனடி நண்ணுவரே. (2) 10 

2: நாமமாயிரம் 

கலி விருத்தம் 

514: 
நாமமாயிர மேத்தநின்ற 

நாராயணாநர னே,உன்னை 
மாமிதன்மக னாகப்பெற்றா 

லெமக்குவாதை தவிருமே, 
காமன்போதரு காலமென்றுபங் 

குனிநாள்கடை பாரித்தோம், 
தீமைசெய்யும் சிரீதரா.எங்கள் 

சிற்றில்வந்து சிதையேலே. (2) 1 

515: 
இன்றுமுற்றும் முதுகுநோவ 

இருந்திழைத்தஇச் சிற்றிலை, 
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் 

ஆர்வந்தன்னைத் தணிகிடாய், 
அன்றுபாலக னாகியாலிலை 

மேல்துயின்றவெம் மாதியாய், 
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் 

கம்மெழாததெம் பாவமே. 2 

516: 
குண்டுநீருறை கோளரீ.மத 

யானைகோள்விடுத் தாய்,உன்னைக் 
கண்டுமாலுறு வோங்களைக்கடைக் 

கண்களாலிட்டு வாதியேல், 
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் 

கைகளால்சிர மப்பட்டோ ம், 
தெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள் 

சிற்றில்வந்து சிதையேலே. 3 

517: 
பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன், 

பேச்சும்செய்கையும், எங்களை 
மையலேற்றி மயக்கவுன்முகம் 

மாயமந்திரந் தான்கொலோ, 
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை 

நோவநாங்களு ரைக்கிலோம், 
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள் 

சிற்றில்வந்து சிதையேலே. 4 

518: 
வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் 

விசித்திரப்பட, வீதிவாய்த் 
தெள்ளிநாங்களி ழைத்தகோல 

மழித்தியாகிலும், உன்றன்மேல் 
உள்ளமோடி யுருகலல்லால் 

உரோடமொன்று மிலோங்கண்டாய், 
கள்ளமாதவா. கேசவா.உன் 

முகத்தனகண்க ளல்லவே. 5 

519: 
முற்றிலாதபிள் ளைகளோம்முலை 

போந்திலாதோமை, நாடொறும் 
சிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி 

துண்டுதிண்ணென நாமது 
கற்றிலோம்,கட லையடைத்தரக்- 

கர்குலங்களை முற்றவும் 
செற்று,இலங்கையைப் பூசலாக்கிய 

சேவகா.எம்மை வாதியேல். 6 

520: 
பேதநன்கறி வார்களோடிவை 

பேசினால்பெரி திஞ்சுவை, 
யாதுமொன்றறி யாதபிள்ளைக 

ளோமைநீநலிந் தென்பயன், 
ஓதமாகடல் வண்ணா.உன்மண 

வாட்டிமாரொடு சூழறும், 
சேதுபந்தம் திருத்தினாயெங்கள் 

சிற்றில்வந்து சிதையேலே. 7 

521: 
வட்டவாய்ச்சிறு தூதையோடு 

சிறுசுளகும்மண லுங்கொண்டு, 
இட்டமாவிளை யாடுவோங்களைச் 

சிற்றிலீடழித் தென்பயன், 
தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர்ச் 

சக்கரம்கையி லேந்தினாய், 
கட்டியும்கைத் தாலின்னாமை 

அறிதியேகடல் வண்ணனே. 8 

522: 
முற்றத்தூடு புகுந்துநின்முகங் 

காட்டிப்புன்முறு வல்செய்து, 
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் 

கக்கடவையோ கோவிந்தா, 
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற 

நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்- 
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப் 

பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்? 9 

523: 
சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் 

சிற்றில்நீசிதை யேல். என்று, 
வீதிவாய்விளை யாடுமாயர் 

சிறுமியர்மழ லைச்சொல்லை, 
வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி 

புத்தூர்மன்விட்டு சித்தன்றன், 
கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை 

வின்றிவைகுந்தம் சேர்வரே. 2 10 

3: கோழியழைப்பதன் 

524: 
கோழி யழைப்பதன் முன்னம் 

குடைந்துநீ ராடுவான் போந்தோம், 
ஆழியஞ் செல்வ னெழுந்தான் 

அரவணை மேல்பள்ளி கொண்டாய், 
ஏழைமை யாற்றவும் பட்டோ ம் 

இனியென்றும் பொய்கைக்கு வாரோம், 
தோழியும் நானும் தொழுதோம் 

துகிலைப் பணித்தரு ளாயே. (2) 1 

525: 
இதுவென் புகுந்ததிங் கந்தோ. 

இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய், 
மதுவின் துழாய்முடி மாலே. 

மாயனே.எங்க ளமுதே, 
விதியின்மை யாலது மாட்டோ ம் 

வித்தகப் பிள்ளாய். விரையேல், 
குதிகொண் டரவில் நடித்தாய். 

குருந்திடைக் கூறை பணியாய். 2 

526: 
எல்லே யீதென்ன இளமை 

எம்மனை மார்காணி லொட்டார், 
பொல்லாங்கீ தென்று கருதாய் 

பூங்குருந் தேறி யிருத்தி, 
வில்லாலி லங்கை யழித்தாய்.நீ 

வேண்டிய தெல்லாம் தருவோம், 
பல்லாரும் காணாமே போவோம் 

பட்டைப் பணித்தரு ளாயே. 3 

527: 
பரக்க விழித்தெங்கும் நோக்கிப் 

பலர்குடைந் தாடும் சுனையில், 
அரக்கநில் லாகண்ண நீர்கள் 

அலமரு கின்றவா பாராய், 
இரக்கமே லொன்று மிலாதாய். 

இலங்கை யழித்த பிரானே, 
குரக்கர சாவ தறிந்தோம் 

குருந்திடைக் கூறை பணியாய். 4 

528: 
காலைக் கதுவிடு கின்ற 

கயலோடு வாளை விரவி, 
வேலைப் பிடித்தெந்னை மார்கள் 

ஓட்டிலென் னவிளை யாட்டோ , 
கோலச்சிற் றாடை பலவுங் 

கொண்டுநீ யேறி யிராதே, 
கோலங் கரிய பிரானே. 

குருந்திடைக் கூறை பணியாய். 5 

529: 
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் 

தாள்களெங் காலைக் கதுவ, 
விடத்தே ளெறிந்தாலே போல 

வேதனை யற்றவும் பட்டோ ம் 
குடத்தை யெடுத்தேற விட்டுக் 

கூத்தாட வல்லஎங் கோவே, 
படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள் 

பட்டைப் பணித்தரு ளாயே. 6 

530: 
நீரிலே நின்றயர்க் கின்றோம் 

நீதியல் லாதன செய்தாய், 
ஊரகம் சாலவும் சேய்த்தால் 

ஊழியெல் லாமுணர் வானே, 
ஆர்வ முனக்கே யுடையோம் 

அம்மனை மார்காணி லொட்டார், 
போர விடாயெங்கள் பட்டைப் 

பூங்குருந் தேறியி ராதே. 7 

531: 
மாமிமார் மக்களே யல்லோம் 

மற்றுமிங் கெல்லாரும் போந்தார், 
தூமலர்க் கண்கள் வளரத் 

தொல்லையி ராத்துயில் வானே, 
சேமமே லன்றிது சாலச் 

சிக்கென நாமிது சொன்னோம், 
கோமள ஆயர்கொ ழுந்தே. 

குருந்திடைக் கூறை பணியாய். 8 

532: 
கஞ்சன் வலைவைத்த வன்று 

காரிரு ளெல்லில் பிழைத்து, 
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் 

நின்றஇக் கன்னிய ரோமை, 
அஞ்ச உரப்பாள் அசோதை 

ஆணாட விட்டிட் டிருக்கும், 
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட 

மசிமையி லீ.கூறை தாராய். 9 

533: 
கன்னிய ரோடெங்கள் நம்பி 

கரிய பிரான்விளை யாட்டை, 
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த 

புதுவையர் கோன்பட்டன் கோதை, 
இன்னிசை யால்சொன்ன மாலை 

ஈரைந்தும் வல்லவர் தாம்போய், 
மன்னிய மாதவ னோடு 

வைகுந்தம் புக்கிருப் பாரே. 2 10 

4: தெள்ளியார் பலர் 

கலி விருத்தம் 

534: 
தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார், 
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார், 
பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட, 
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1 

535: 
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், 
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன், 
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும் 
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. (2) 2 

536: 
பூம கன்புகழ் வானவர் போற்றுதற் 
காம கன்,அணி வாணுதல் தேவகி 
மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம், 
கோம கன்வரில் கூடிடு கூடலே. 3 

537: 
ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட, 
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து, 
வாய்த்த காளியன் மேல்நட மாடிய, 
கூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4 

538: 
மாட மாளிகை சூழ்மது ரைப்பதி 
நாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு, 
ஓடை மாமத யானை யுதைத்தவன், 
கூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5 

539: 
அற்ற வன்மரு தம்முறி யநடை 
கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால் 
செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி, 
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6 

540: 
அன்றின் னாதன செய்சிசு பாலனும், 
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும், 
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன் 
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7 

541: 
ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி 
மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக் 
காவ லன்,கன்று மேய்த்து விளையாடும், 
கோவ லன்வரில் கூடிடு கூடலே. 8 

542: 
கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று, 
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில், 
அண்ட மும்நில னும்அடி யொன்றினால், 
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9 

543: 
பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம் 
ஒழுகு வாரண முய்ய வளித்த,எம் 
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள், 
குழக னார்வரில் கூடிடு கூடலே. 10 

544: 
ஊடல் கூட லுணர்தல் புணர்தலை, 
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர், 
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய, 
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. (2) 11 


5: மன்னு பெரும்புகழ் 

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

545: 
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி 

வண்ணன் மணிமுடி மைந்தன் 
தன்னை, உகந்தது காரண மாகஎன் 

சங்கிழக் கும்வழக் குண்டே, 
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் 

பொதும்பினில் வாழும் குயிலே, 
பன்னியெப் போது மிருந்து விரைந்தென் 

பவளவா யன்வரக் கூவாய். (2) 1 

546: 
வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட 

விமல னெனக்குருக் காட்டான், 
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் 

உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும், 
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் 

களித்திசை பாடுங் குயிலே, 
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் 

வேங்கட வன்வரக் கூவாய். 2 

547: 
மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் 

இராவணன் மேல்,சர மாரி 
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த 

தலைவன் வரவெங்குங் காணேன், 
போதலர் காவில் புதுமணம் நாறப் 

பொறிவண்டின் காமரங் கேட்டு,உன் 
காதலி யோடுடன் வாழ்குயி லே.என் 

கருமாணிக் கம்வரக் கூவாய். 3 

548: 
என்புரு கியின வேல்நெடுங் கண்கள் 

இமைபொருந் தாபல நாளும், 
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் 

தோணி பெறாதுழல் கின்றேன், 
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது 

நீயு மறிதி குயிலே, 
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் 

புண்ணிய னைவரக் கூவாய். 4 

549: 
மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் 

வில்லிபுத் தூருறை வான்றன், 
பொன்னடி காண்பதோ ராசயி னாலென் 

பொருகயற் கண்ணிணை துஞ்சா, 
இன்னடி சிலோடு பாலமு தூட்டி 

எடுத்தவென் கோலக் கிளியை, 
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே. 

உலகளந் தான்வரக் கூவாய். (2) 5 

550: 
எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் 

இருடீகே சன்வலி செய்ய, 
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் 

முலயு மழகழிந் தேன்நான், 
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை 

கொள்ளு மிளங்குயி லே,என் 
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் 

தலையல்லால் கைம்மாறி லேனே. 6 

551: 
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் 

புணர்வதோ ராசயி னால்,என் 
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் 

தாவியை யாகுலஞ் செய்யும், 
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு 

ஆழியும் சங்குமொண் தண்டும், 
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ, 

சாலத் தருமம் பெறுதி. 7 

552: 
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் 

சதுரன் பொருத்த முடையன், 
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் 

நானு மவனு மறிதும், 
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் 

சிறுகுயி லே,திரு மாலை 
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில் 

அவனைநான் செய்வன காணே. 8 

553: 
பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் 

பாசத் தகப்பட்டி ருந்தேன், 
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி 

லே.குறிக் கொண்டிது நீகேள், 
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் 

பொன்வளை கொண்டு தருதல், 
இங்குள்ள காவினில் வாழக் கருதில் 

இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9 

554: 
அன்றுல கம்மளந் தானை யுகந்தடி- 

மைக்கண வன்வலி செய்ய, 
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை 

நலியும் முறைமை யறியேன், 
என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் 

தகர்த்தாதே நீயும் குயிலே, 
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல் 

இங்குத்தை நின்றும் துரப்பன். 10 

555: 
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை 

வேற்கண் மடந்தை விரும்பி, 
கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு 

கருங்குயி லே. என்ற மாற்றம், 
பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் 

பட்டர்பி ரான்கோதை சொன்ன, 
நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ- 

நாராய ணாயவென் பாரே. (2) 11 

6:வாரணமாயிரம் 

கலி விருத்தம் 

556: 
வாரண மாயிரம் சூழவ லம்செய்து, 
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், 
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், 
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1 

557: 
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, 
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ், 
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர் 
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2 

558: 
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம், 
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து, 
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை, 
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3 

559: 
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி, 
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி, 
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை, 
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4 

560: 
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி, 
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள, 
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும் 
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5 

561: 
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத, 
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ் 
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6 

562: 
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால், 
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து, 
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி, 
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7 

563: 
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான், 
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி, 
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி, 
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8 

564: 
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு 
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி, 
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து, 
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9 

565: 
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து, 
மங்கல வீதி வலம்செய்து மணநீர், 
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல், 
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10 

566: 
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை, 
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல், 
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர், 
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11 

7: கருப்பூரம் நாறுமோ 

கலிவிருத்தம் 

567: 
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ, 
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ, 
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், 
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1 

568: 
கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன் 
உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத் 
திடரில் குடியேறித் தீய வசுரர், 
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2 

569: 
தடவரை யின்மீதே சரற்கால சந்திரன், 
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும் 
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில், 
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3 

570: 
சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில், 
அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில், 
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே, 
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4 

571: 
உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை, 
இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண், 
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம், 
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5 

572: 
போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம், 
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு 
சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய 
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே. 


573: 

செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல் 
செங்கட் கருமேனி வாசுதே வனுடய, 
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும், 
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7 

574: 

உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம், 
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே, 
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார், 
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8 

575: 
பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப, 
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம், 
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால், 
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9 

576: 
பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும், 
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை, 
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும், 
ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. (2) 10 

8: விண்ணீல மேலாப்பு 

தரவு கொச்சகக் கலிப்பா 

577: 
விண்ணீல மேலாப்பு 

விரித்தாற்போல் மேகங்காள், 
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் 

திருமாலும் போந்தானே, 
கண்ணீர்கள் முலைக்குவட்டில் 

துளிசோரச் சோர்வேனை, 
பெண்ணீர்மை யீடழிக்கும் 

இதுதமக்கோர் பெருமையே? (2) 1 

578: 
மாமுத்த நிதிசொரியும் 

மாமுகில்காள், வேங்கடத்துச் 
சாமத்தின் நிறங்கொண்ட 

தாடாளன் வார்த்தையென்னே, 
காமத்தீ யுள்புகுந்து 

கதுவப்பட்டு இடைக்கங்குல், 
ஏமத்தோர் தென்றலுக்கிங்- 

கிலக்காய்நா னிருப்பேனே. 2 

579: 
ஒளிவண்ணம் வளைசிந்தை 

உறக்கத்தோ டிவையெல்லாம், 
எளிமையா லிட்டென்னை 

ஈடழியப் போயினவால், 
குளிரருவி வேங்கடத்தென் 

கோவிந்தன் குணம்பாடி, 
அளியத்த மேகங்காள். 

ஆவிகாத் திருப்பேனே. 3 

580: 
மின்னாகத் தெழுகின்ற 

மேகங்காள், வேங்கடத்துத் 
தன்னாகத் திருமங்கை 

தங்கியசீர் மார்வற்கு, 
என்னாகத் திளங்கொங்கை 

விரும்பித்தாம் நாடோ றும், 
பொன்னாகம் புல்குதற்கென் 

புரிவுடைமை செப்புமினே. 4 

581: 
வான்கொண்டு கிளர்ந்தெழுந்த 

மாமுகில்காள், வேங்கடத்துத் 
தேன்கொண்ட மலர்ச்சிதறத் 

திரண்டேறிப் பொழிவீர்காள், 
ஊன்கொண்ட வள்ளுகிரால் 

இரணியனை யுடலிடந்தான், 
தான்கொண்ட சரிவளைகள் 

தருமாகில் சாற்றுமினே. 5 

582: 
சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த 

தண்முகில்காள், மாவலியை 
நிலங்கொண்டான் வேங்கடத்தே 

நிரந்தேறிப் பொழிவீர்காள், 
உலங்குண்ட விளங்கனிபோல் 

உள்மெலியப் புகுந்து,என்னை 
நலங்கொண்ட நாரணற்கென் 

நடலைநோய் செப்புமினே. 6 

583: 
சங்கமா கடல்கடைந்தான் 

தண்முகில்காள், வேங்கடத்துச் 
செங்கண்மால் சேவடிக்கீழ் 

அடிவீழ்ச்சி விண்ணப்பம், 
கொங்கைமேல் குங்குமத்தின் 

குழம்பழியப் புகுந்து,ஒருநாள் 
தங்குமே லென்னாவி 

தங்குமென் றுரயீரே. (2) 7 

584: 
கார்காலத் தெழுகின்ற 

கார்முகில்காள், வேங்கடத்துப் 
போர்காலத் தெழுந்தருளிப் 

பொருதவனார் பேர்சொல்லி, 
நீர்காலத் தெருக்கிலம் 

பழவிலைபோல் வீழ்வேனை, 
வார்காலத் தொருநாள்தம் 

வாசகம்தந் தருளாரே. 8 

585: 
மதயானை போலெழுந்த 

மாமுகில்காள், வேங்கடத்தைப் 
பதியாக வாழ்வீர்காள். 

பாம்பணையான் வார்த்தையென்னே, 
கதியென்றும் தானாவான் 

கருதாது,ஓர் பெண்கொடியை 
வதைசெய்தான். என்னும்சொல் 

வையகத்தார் மதியாரே. (2) 9 

586: 
நாகத்தி னணையானை 

நன்னுதலாள் நயந்துரைசெய், 
மேகத்தை வேங்கடக்கோன் 

விடுதூதில் விண்ணப்பம், 
போகத்தில் வழுவாத 

புதுவையர்கோன் கோதைதமிழ், 
ஆகத்து வைத்துரைப்பார் 

அவரடியா ராகுவரே. (2) 10: 


9: சிந்தூரச் செம்பொடி 

கலிநிலைத்துறை 

587: 
சிந்துரச் செம்பொடிப்போல் 

திருமாலிருஞ் சோலையெங்கும், 
இந்திர கோபங்களே 

எழுந்தும்பரந் திட்டனவால், 
மந்தரம் நாட்டியன்று 

மதுரக்கொழுஞ் சாறுகொண்ட 
சுந்தரத் தோளுடையான் 

சுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1 

588: 
போர்களி றுபொரும்மா 

லிருஞ்சோலையம் பூம்புறவில், 
தார்க்கொடி முல்லைகளும் 

தவளநகை காட்டுகின்ற, 
கார்க்கொள் படாக்கள்நின்று 

கழறிச்சிரிக் கத்தரியேன், 
ஆர்க்கிடு கோதோழி. 

அவன்தார்ச்செய்த பூசலையே. 2 

589: 
கருவிளை யொண்மலர்காள். 

காயாமலர் காள்,திருமால் 
உருவொளி காட்டுகின்றீர் 

எனக்குய்வழக் கொன்றுரையீர், 
திருவிளை யாடுதிண்டோ ள் 

திருமாலிருஞ் சோலைநம்பி, 
வரிவளை யில்புகுந்து 

வந்திபற்றும் வழ்க்குளதே. 3 

590: 
பைம்பொழில் வாழ்குயில்காள். 

மயில்காள்.ஒண் கருவிளைகாள், 
வம்பக் களங்கனிகாள். 

வண்ணப்பூவை நறுமலர்காள், 
ஐம்பெரும் பாதகர்காள். 

அணிமாலிருஞ் சோலைநின்ற, 
எம்பெரு மானுடைய 

நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 4 

591: 
துங்க மலர்ப்பொழில்சூழ் 

திருமாலிருஞ் சோலைநின்ற, 
செங்கட் கருமுகிலின் 

திருவுருப் போல்,மலர்மேல் 
தொங்கிய வண்டினங்காள். 

தொகுபூஞ்சுனை காள்,சுனையில் 
தங்குசெந் தாமரைகாள். 

எனக்கோர்சரண் சாற்றுமினே. 5 

592: 
நாறு நறும்பொழில்மா 

லிருஞ்சோலை நம்பிக்கு, நான் 
நூறு தடாவில்வெண்ணெய் 

வாய்நேர்ந்து பராவிவைத்தேன், 
நூறு தடாநிறைந்த 

அக்கார வடிசில்சொன்னேன், 
ஏறு திருவுடையான் 

இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6 

593: 
இன்றுவந் தித்தனையும் 

அமுதுசெய் திடப்பெறில்,நான் 
ஒன்று நூறாயிரமாக் 

கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன், 
தென்றல் மணங்கமழும் 

திருமாலிருஞ் சோலைதன்னுள் 
நின்ற பிரான்,அடியேன் 

மனத்தேவந்து நேர்படிலே. 7 

594: 
காலை யெழுந்திருந்து 

கரியகுரு விக்கணங்கள், 
மாலின் வரவுசொல்லி 

மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ, 
சோலை மலைப்பெருமான் 

துவராபதி யெம்பெருமான், 
ஆலி னிலைப்பெருமான் 

அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8 

595: 
கோங்கல ரும்பொழில்மா- 

லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் 
தூங்குபொன் மாலைகளோ- 

டுடனாய்நின்று தூங்குகின்றேன், 
பூங்கொள் திருமுகத்து 

மடுத்தூதிய சங்கொலியும், 
சார்ங்கவில் நாணொலியும் 

தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9 

596: 
சந்தொடு காரகிலும் 

சுமந்துதடங் கள்பொருது, 
வந்திழி யும்சிலம்பா- 

றுடைமாலிருஞ் சோலைநின்ற, 
சுந்தரனை, சுரும்பார் 

குழல்கோதை தொகுத்துரைத்த, 
செந்தமிழ் பத்தும்வல்லார் 

திருமாலடி சேர்வர்களே. (2) 10 


10: கார்க்கோடல் பூக்காள் . 

கலிநிலைத்துறை 

597: 
கார்க்கோடல் பூக்காள். கார்க்கடல் 

வண்ணனென் மேல்உம்மைப் 
போர்க்கோலம் செய்து போர 

விடுத்தவ னெங்குற்றான், 
ஆர்க்கோ இனிநாம் பூச 

லிடுவது, அணிதுழாய்த் 
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் 

படைக்கவல் லேனந்தோ. (2) 1 

598: 
மேற்றோன்றிப் பூக்காள் மேலுல 

கங்களின் மீதுபோய், 
மேற்றோன்றும் சோதி வேத 

முதல்வர் வலங்கையில், 
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் 

போலச் சுடாது,எம்மை 
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து 

வைத்துகொள் கிற்றிரே. 2 

599: 
கோவை மணாட்டி. நீயுன் 

கொழுங்கனி கொண்டு,எம்மை 
ஆவி தொலைவியேல் வாயழ- 

கர்தம்மை யஞ்சுதும் 
பாவி யேன்தோன்றிப் பாம்பணை- 

யார்க்கும்தம் பாம்புபோல், 
நாவு மிரண்டுள வாய்த்து 

நாணிலி யேனுக்கே. 3 

600: 
முல்லைப் பிராட்டி.நீயுன் 

முறுவல்கள் கொண்டு,எம்மை 
அல்லல் விளைவியே லாழிநங் 

காய்.உன்ன டைக்கலம், 
கொல்லை யரக்கியை மூக்கரிந் 

திட்ட குமரனார் 
சொல்லும் பொய்யானால், நானும் 

பிறந்தமை பொய்யன்றே. 4 

601: 
பாடும் குயில்காள். ஈதென்ன 

பாடல்,நல் வேங்கட 
நாடர் நமக்கொரு வாழ்வுதந் 

தால்வந்து பாடுமின், 
ஆடும் கருளக் கொடியுடை 

யார்வந் தருள்செய்து, 
கூடுவ ராயிடில் கூவிநும் 

பாட்டுகள் கேட்டுமே. 5 

602: 
கணமா மயில்காள். கண்ணபி 

ரான்திருக் கோலம்போன்று, 
அணிமா நடம்பயின் றாடுகின் 

றீர்க்கடி வீழ்கின்றேன், 
பணமா டரவணைப் பற்பல 

காலமும் பள்ளிகொள், 
மணவாளர் நம்மை வைத்த 

பரிசிது காண்மினே. 6 

603: 
நடமாடித் தோகை விரிக்கின்ற 

மாமயில் காள்,உம்மை 
நடமாட்டங் காணப் பாவியேன் 

நானோர் முதலிலேன், 
குடமாடு கூத்தன் கோவிந்தன் 

கோமிறை செய்து,எம்மை 
உடைமாடு கொண்டா னுங்களுக் 

கினியொன்று போதுமே ? 7 

604: 
மழையே. மழையே. மண்புறம் 

பூசியுள் ளாய்நின்ற, 
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் 

வேங்கடத் துள்நின்ற, 
அழகப் பிரானார் தம்மையென் 

நெஞ்சத் தகப்படத் 
தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண் 

டூற்றவும் வல்லையே? 8 

605: 
கடலே. கடலே. உன்னைக் 

கடைந்து கலக்குறுத்து 
உடலுள் புகுந்துநின் றூறல் 

அறுத்தவற்கு, என்னையும் 
உடலுள் புகுந்துநின் றூறல் 

அறுக்கின்ற மாயற்குஎன் 
நடலைக ளெல்லாம் நாகணைக் 

கேசென்று ரைத்தியே. 9 

606: 
நல்லஎன் தோழி. நாக 

ணைமிசை நம்பரர், 
செல்வர் பெரியர் சிறுமா 

னிடவர்நாம் செய்வதென், 
வில்லி புதுவை விட்டுசித் 

தர்தங்கள் தேவரை, 
வல்ல பரிசு வருவிப்ப 

ரேலது காண்டுமே. (2) 10 

11: தாமுகக்கும் 

தரவு சொச்சகக் கலிப்பா 

607: 
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ, 
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர், 
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர், 
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே. அம்மனே. (2) 1 

608: 
எழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர், 
குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில் 
எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய 
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. 2 

609: 
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், 
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான், 
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார், 
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே. (2) 3 

610: 
மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார், 
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற, 
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல், 
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே ? 4 

611: 
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று, 
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான், 
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான், 
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. 5 

612: 
கைப்பொருள்கள் முன்னமே 

கைக்கொண்டார், காவிரிநீர் 
செய்ப்புரள வோடும் 

திருவரங்கச் செல்வனார், 
எப்பொருட்கும் நின்றார்க்கு 

மெய்தாது, நான்மறையின் 
சொற்பொருளாய் நின்றாரென் 

மெய்ப்பொருளும் கொண்டாரே. 6 

613: 
உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து, 
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம், 
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார், 
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7 

614: 
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள் 
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம், 
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார், 
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. (2) 8 

615: 
கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான், 
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து, 
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த, 
பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. 9 

616: 
செம்மை யுடைய 

திருவரங்கர் தாம்பணித்த, 
மெய்ம்மைப் பெருவார்த்தை 

விட்டுசித்தர் கேட்டிருப்பர், 
தம்மை யுகப்பாரைத் 

தாமுகப்ப ரென்னும்சொல், 
தம்மிடையே பொய்யானால் 

சாதிப்பா ராரினியே . (2) 10 


12: மற்றிருந்தீர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

617: 
மற்றிருந் தீர்கட் கறியலாகா 

மாதவ னென்பதோ ரன்புதன்னை, 
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம் 

ஊமைய ரோடு செவிடர்வார்த்தை, 
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் 

பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி, 
மற்பொருந் தாமற் களமடைந்த 

மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின். (2) 1 

618: 
நாணி யினியோர் கருமமில்லை 

நாலய லாரும் அறிந்தொழிந்தார், 
பாணியா தென்னை மருந்து செய்து 

பண்டுபண் டாக்க வுறுதிராகில், 
மாணி யுருவா யுலகளந்த 

மாயனைக் காணில் தலைமறியும், 
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் 

ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின். 2 

619: 
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் 

தனிவழி போயினாள். என்னும்சொல்லு, 
வந்தபின் னைப்பழி காப்பரிது 

மாயவன் வந்துருக் காட்டுகின்றான், 
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் 

குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற, 
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே 

நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின். 3 

620: 
அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் 

அவன்முகத் தன்றி விழியேனென்று, 
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச் 

சிறுமா னிடவரைக் காணில்நாணும், 
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் 

கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா, 
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய் 

யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 4 

621: 
ஆர்க்குமென் நோயி தறியலாகா 

தம்மனை மீர்.துழ திப்படாதே, 
கார்க்கடல் வண்ணனென் பானொருவன் 

கைகண்ட யோகம் தடவத்தீரும், 
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக் 

காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து, 
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த 

பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 5 

622: 
கார்த்தண் முகிலும் கருவிளையும் 

காயா மலரும் கமலப்பூவும், 
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் 

டிருடீகே சன்பக்கல் போகேயென்று, 
வேர்த்துப் பசித்து வயிறசைந்து 

வேண்டடி சிலுண்ணும் போது,ஈதென்று 
பார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும் 

பத்தவி லோசநத் துய்த்திடுமின். 6 

623: 
வண்ணம் திரிவும் மனங்குழைவும் 

மானமி லாமையும் வாய்வெளுப்பும், 
உண்ண லுறாமையு முள்மெலிவும் 

ஓதநீர் வண்ணனென் பானொருவன், 
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு 

சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப் 
பண்ணழி யப்பல தேவன்வென்ற 

பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின். 7 

624: 
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் 

காடுவாழ் சாதியு மாகப்பெற்றான், 
பற்றி யுரலிடை யாப்புமுண்டான் 

பாவிகாள். உங்களுக் கேச்சுக்கொலோ, 
கற்றன பேசி வசையுணாதே 

காலிக ளுய்ய மழைதடுத்து, 
கொற்றக் குடையாக வேந்திநின்ற 

கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின். 8 

625: 
கூட்டி லிருந்து கிளியெப்போதும் 

கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும், 
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் 

உலகளந் தான். என் றுயரக்கூவும், 
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள் 

நன்மை யிழந்து தலையிடாதே, 
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் 

துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9 

626: 
மன்னு மதுரை தொடக்கமாக 

வண்துவ ராபதி தன்னளவும், 
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித் 

தாழ்குழ லாள்துணிந் ததுணிவை, 
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும் 

புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை, 
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை 

ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. (2) 10 


13: கண்ணனென்னும் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

627: 
கண்ண னென்னும் கருந்தெய்வம் 

காட்சி பழகிக் கிடப்பேனை, 
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் 

புறநின் றழகு பேசாதே, 
பெண்ணின் வருத்த மறியாத 

பெருமா னரையில் பீதக 
வண்ண ஆடை கொண்டு,என்னை 

வாட்டம் தணிய வீசீரே. (2) 1 

628: 
பாலா லிலையில் துயில்கொண்ட 

பரமன் வலைப்பட் டிருந்தேனை, 
வேலால் துன்னம் பெய்தாற்போல் 

வேண்டிற் றெல்லாம் பேசாதே, 
கோலால் நிரைமேய்த் தாயனாய்க் 

குடந்தைக் கிடந்த குடமாடி, 
நீலார் தண்ணந் துழாய்கொண்டென் 

நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2 

629: 
கஞ்சைக் காய்ந்த கருவல்லி 

கடைக்க ணென்னும் சிறைக்கோலால், 
நெஞ்சூ டுருவ வேவுண்டு 

நிலையும் தளர்ந்து நைவேனை, 
அஞ்சே லென்னா னவனொருவன் 

அவன்மார் வணிந்த வனமாலை, 
வஞ்சி யாதே தருமாகில் 

மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3 

630: 
ஆரே யுலகத் தாற்றுவார் 

ஆயர் பாடி கவர்ந்துண்ணும், 
காரே றுழக்க வுழக்குண்டு 

தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, 
ஆரா வமுத மனையான்றன் 

அமுத வாயி லூறிய, 
நீர்தான் கொணர்ந்து புலராமே 

பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4 

631: 
அழிலும் தொழிலு முருக்காட்டான் 

அஞ்சே லென்னா னவனொருவன், 
தழுவி முழுகிப் புகுந்தென்னைச் 

சுற்றிச் சுழன்று போகானால், 
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே 

நெடுமா லூதி வருகின்ற 
குழலின் தொளைவாய் நீர்கொண்டு 

குளிர முகத்துத் தடவீரே. 5 

632: 
நடையொன் றில்லா வுலகத்து 

நந்த கோபன் மகனென்னும், 
கொடிய கடிய திருமாலால் 

குளப்புக் கூறு கொளப்பட்டு, 
புடையும் பெயர கில்லேன்நான் 

போட்கன் மிதித்த அடிப்பாட்டில் 
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் 

போகா வுயிரென் னுடம்பையே. 6 

633: 
வெற்றிக் கருள கொடியான்றன் 

மீமீ தாடா வுலகத்து, 
வெற்ற வெறிதே பெற்றதாய் 

வேம்பே யாக வளர்த்தாளே, 
குற்ற மற்ற முலைதன்னைக் 

குமரன் கோலப் பணைத்தோளோடு, 
அற்ற குற்ற மவைதீர 

அணைய வமுக்கிக் கட்டீரே. 7 

634: 
உள்ளே யுருகி நைவேனை 

உளளோ இலளோ வென்னாத, 
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் 

கோவர்த் தனனைக் கண்டக்கால், 
கொள்ளும் பயனொன் றில்லாத 

கொங்கை தன்னைக் கிழங்கோடும் 
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் 

எறிந்தென் அழலை தீர்வேனே. 8 

635: 
கொம்மை முலைக ளிடர்தீரக் 

கோவிந் தற்கோர் குற்றேவல், 
இம்மைப் பிறவி செய்யாதே 

இனிப்போய்ச் செய்யும் தவந்தானென், 
செம்மை யுடைய திருமார்வில் 

சேர்த்தா னேலும் ஒருஞான்று, 
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி 

விடைதான் தருமேல் மிகநன்றே. 9 

636: 
அல்லல் விளைத்த பெருமானை 

ஆயர் பாடிக் கணிவிளக்கை, 
வில்லி புதுவை நகர்நம்பி 

விட்டு சித்தன் வியன்கோதை, 
வில்லைத் தொலைத்த புருவத்தாள் 

வேட்கை யுற்று மிகவிரும்பும், 
சொல்லைத் துதிக்க வல்லார்கள் 

துன்பக் கடளுள் துவளாரே. (2) 10 


14: பட்டி மேய்ந்து 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

637: 
பட்டி மேய்ந்தோர் காரேறு 

பலதே வற்கோர் கீழ்க்கன்றாய், 
இட்டீ றிட்டு விளையாடி 

இங்கே போதக் கண்டீரே?- 
இட்ட மான பசுக்களை 

இனிது மறித்து நீரூட்டி, 
விட்டுக் கொண்டு விளையாட 

விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 1 

638: 
அனுங்க வென்னைப் பிரிவுசெய் 

தாயர் பாடி கவர்ந்துண்ணும், 
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் 

கோவர்த் தனனைக் கண்டீரே?- 
கணங்க ளோடு மின்மேகம் 

கலந்தாற் போல, வனமாலை 
மினுங்க நின்று விளையாட 

விருந்தா வனத்தே கண்டோ மே. 2 

639: 
மாலாய்ப் பிரந்த நம்பியை 

மாலே செய்யும் மணாளனை, 
ஏலாப் பொய்க ளுரைப்பானை 

இங்கே போதக் கண்டீரே?- 
மேலால் பரந்த வெயில்காப்பான் 

வினதை சிறுவன் சிறகென்னும், 
மேலாப் பின்கீழ் வருவானை 

விருந்தா வனத்தே கண்டோ மே. 3 

640: 
கார்த்தண் கமலக் கண்ணென்னும் 

நெடுங்கயி றுபடுத் தி,என்னை 
ஈர்த்துக் கொண்டு விளையாடும் 

ஈசன் றன்னைக் கண்டீரே?- 
போர்த்த முத்தின் குப்பாயப் 

புகர்மால் யானைக் கன்றேபோல், 
வேர்த்து நின்று விளையாட 

விருந்தா வனத்தே கண்டோ மே. 4 

641: 
மாத வன்என் மணியினை 

வலையில் பிழைத்த பன்றிபோல், 
ஏது மொன்றும் கொளத்தாரா 

ஈசன் றன்னைக் கண்டீரே?- 
பீதக வாடை யுடைதாழப் 

பெருங்கார் மேகக் கன்றேபோல், 
வீதி யார வருவானை 

விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 5 

642: 
தரும மறியாக் குறும்பனைத் 

தங்கைச் சார்ங்க மதுவேபோல், 
புருவ வட்ட மழகிய 

பொருத்த மிலியைக் கண்டீரே?- 
உருவு கரிதாய் முகம்செய்தாய் 

உதயப் பருப்ப தத்தின்மேல், 
விரியும் கதிரே போல்வானை 

விருந்தா வனத்தே கண்டோ மே. 6 

643: 
பொருத்த முடைய நம்பியைப் 

புறம்போ லுள்ளும் கரியானை 
கருத்தைப் பிழைத்து நின்றஅக் 

கருமா முகிலைக் கண்டீரே?- 
அருத்தித் தாரா கணங்களால் 

ஆரப் பெருகு வானம்போல், 
விருத்தம் பெரிதாய் வருவானை 

விருந்தா வனத்தே கண்டோ மே. 7 

644: 
வெளிய சங்கொன் றுடையானைப் 

பீதக வாடை யுடையானை, 
அளிநன் குடைய திருமாலை 

ஆழி யானைக் கண்டீரே?- 
களிவண் டெங்கும் கலந்தாற்போல் 

கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல், 
மிளிர நின்று விளையாட 

விருந்தா வனத்தே கண்டோ மே. 8 

645: 
நாட்டைப் படையென்று அயன்முதலாத் 

தந்த நளிர்மா மலருந்தி, 
வீட்டைப் பண்ணி விளையாடும் 

விமலன் றன்னைக் கண்டீரே?- 
காட்டை நாடித் தேனுகனும் 

களிறும் புள்ளு முடன்மடிய, 
வேட்டை யாடி வருவானை 

விருந்தா வனத்தே கண்டோ மே. 9 

646: 
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த 

பரமன் றன்னை, பாரின்மேல் 
விருந்தா வனத்தே கண்டமை 

விட்டு சித்தன் கோதைசொல், 
மருந்தா மென்று தம்மனத்தே 

வைத்துக் கொண்டு வாழ்வார்கள், 
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் 

பிரியா தென்று மிருப்பாரே. (2) 10 

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 




ஸ்ரீ: 

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: 

பெருமாள் திருமொழி தனியன்கள் 

உடயவர் அருளிச் செய்தது 

நேரிசை வெண்பா 

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 
குலசே கரனென்றே கூறு 

மணக்கால் நம்பி அருளியது 

கட்டளைக் கலித்துறை 

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன் 
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே 

குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம் 

ஸ்ரீ: குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி 


எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

647: 
இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி 

இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த 
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் 

அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி 
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி 

திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் 
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் 

கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே (2) 1.1 

648: 
வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த 

வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ 
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் 

மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ் 
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் 

கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் 
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் 

வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே 1.2 

649: 
எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் 

எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு 
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் 

தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன் 
அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற 

அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் 
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் 

கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே 1.3 

650: 
மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை 

வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி 
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை 

அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப் 
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் 

பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் 
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் 

கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே 1.4 

651: 
இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத் 

தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த 
துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால் 

தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த 
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ 

மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் 
மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென் 

மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே 1.5 

652: 
அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை 

அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும் 
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித் 

திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும் 
களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக் 

கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் 
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென் 

உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே 1.6 

653: 
மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி 

ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம் 
துறந்து,இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் 

தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான 
அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி 

அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் 
நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் 

நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே 1.7 

654: 
கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் 

கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள் 
காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் 

கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப 
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த 

திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் 
மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி 

வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே 1.8 

655: 
தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் 

குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி 
ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் 

மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும் 
சீரார்ந்த முழுவோசை பரவை காட்டும் 

திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் 
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் 

பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே 1.9 

656: 
வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய 

மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய 
துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச் 

சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ 
அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் 

அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் 
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் 

இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே (2) 1.10 

657: 
திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத் 

திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் 
கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக் 

கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால் 
குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள் 

கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த 
நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் 

நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே (2) 1.11 

சந்தக் கலி விருத்தம் 

658: 
தேட்டரும்திறல் தேனினைத்தென் 

னரங்கனைத்திரு மாதுவாழ் 
வாட்டமில்வன மாலைமார்வனை 

வாழ்த்திமால்கொள்சிந் தையராய் 
ஆட்டமேவி யலந்தழைத்தயர் 

வெய்தும்மெய்யடி யார்கள்தம் 
ஈட்டம்கண்டிடக் கூடுமேலது 

காணும்கண்பய னாவதே (2) 2.1 

659: 
தோடுலாமலர் மங்கைதோளிணை 

தேய்ந்ததும்சுடர் வாளியால் 
நீடுமாமரம் செற்றதும்நிரை 

மேய்த்துமிவை யேநினைந்து 
ஆடிப்பாடி அரங்கவோஎன்ற 

ழைக்கும்தொண்ட ரடிப்பொடி 
ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் 

தாடும்வேட்கையென் னாவதே 2.2 

660: 
ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் 

கீண்டதும்முன்னி ராமனாய் 
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் 

சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே 
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட 

ரங்கன்கோயில் திருமுற்றம் 
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் 

சேறெஞ்சென்னிக் கணிவனே 2.3 

661: 
தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் 

உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு 
ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன 

ரங்கனுக்கடி யார்களாய் 
நாத்தழும்பெழ நாரணாவென்ற 

ழைத்துமெய்தழும் பத்தொழு 
தேத்தி,இன்புறும் தொண்டர்சேவடி 

ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே 2.4 

662: 
பொய்சிலைக்குர லேற்றெருத்தமி 

றுத்துபோரர வீர்த்தகோன் 
செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண 

மாமதிள்தென்ன ரங்கனாம் 
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் 

நெஞ்சில்நின்று திகழப்போய் 
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் 

தென்மனம்மெய்சி லிர்க்குமே 2.5 

663: 
ஆதியந்தம னந்தமற்புதம் 

ஆனவானவர் தம்பிரான் 
பாதமாமலர் சூடும்பத்தியி 

லாதபாவிக ளுய்ந்திட 
தீதில்நன்னெரி காட்டியெங்கும் 

திரிந்தரங்கனெம் மானுக்கே 
காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும் 

காதல்செய்யுமென் னெஞ்சமே 2.6 

664: 
காரினம்புரை மேனிநல்கதிர் 

முத்தவெண்ணகைச் செய்யவாய் 
ஆரமார்வ னரங்கனென்னும் 

அரும்பெருஞ்சுட ரொன்றினை 
சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக 

சிந்திழிந்தகண் ணீர்களால் 
வாரநிற்பவர் தாளிணைக்கொரு 

வாரமாகுமென் னெஞ்சமே 2.7 

665: 
மாலையுற்றக டல்கிடந்தவன் 

வண்டுகிண்டுந றுந்துழாய் 
மாலையுற்றவ ரைப்பெருந்திரு 

மார்வனைமலர்க் கண்ணனை 
மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி 

ரிந்தரங்கனெம் மானுக்கே 
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு 

மாலையுற்றதென் நெஞ்சமே 2.8 

666: 
மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி 

லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று 
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந் 

தாடிப்பாடியி றைஞ்சி,என் 
அத்தனச்ச னரங்கனுக்கடி 

யார்களாகி அவனுக்கே 
பித்தராமவர் பித்தரல்லர்கள் 

மற்றையார்முற்றும் பித்தரே 2.9 

667: 
அல்லிமாமலர் மங்கைநாதன் 

அரங்கன்மெய்யடி யார்கள்தம் 
எல்லையிலடி மைத்திறத்தினில் 

என்றுமேவு மனத்தனாம் 
கொல்லிகாவலன் கூடல்நாயகன் 

கோழிக்கோன்குல சேகரன் 
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் 

தொண்டர்தொண்டர்க ளாவரே (2) 2.10 

கலி விருத்தம் 

668: 
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ் 
வையந் தன்னொடும் கூடுவ தில்லையான் 
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் 
மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே (2) 3.1 

669: 
நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும் 
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான் 
ஆலியா அழையா அரங்கா வென்று 
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே 3.2 

670: 

மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும் 
பாரி னாரொடும் கூடுவ தில்லையான் 
ஆர மார்வ னரங்க னனந்தன்நல் 
நார ணன்நர காந்தகன் பித்தனே 3.3 

671: 
உண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம் 
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான் 
அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை 
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே 3.4 

672: 
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய் 
நீதி யாரொடும் கூடுவ தில்லையான் 
ஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப் 
பேதை மாமண வாளன்றன் பித்தனே 3.5 

673: 
எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன் 
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன் 
தம்பி ரானம ரர்க்கு,அரங் கநகர் 
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே 3.6 

674: 
எத்தி றத்திலும் யாரொடும் கூடும்,அச் 
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால் 
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் 
பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே 3.7 

675: 
பேய ரேயெனக் கியாவரும் யானுமோர் 
பேய னேயெவர்க் கும்இது பேசியென் 
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் 
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே 3.8 

676: 
அங்கை யாழி யரங்க னடியிணை 
தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய் 
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல் 
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே (2) 3.9 

தாவு கொச்சகக் கலிப்பா 

677: 
ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன் 
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால் 
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து 
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே (2) 4.1 

678: 
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ 
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் 
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில் 
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே 4.2 

679: 
பின்னிட்ட சடையானும் பிரமனு மந்திரனும் 
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல் 
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும் 
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே 4.3 

680: 
ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள் 
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு 
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து 
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே 4.4 

681: 
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து 
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன் 
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல் 
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே 4.5 

682: 
மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும் 
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன் 
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் 
அன்னனைய பொற்குடவா மருந்தவத்த னானவனே 4.6 

683: 
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் 
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் 
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல் 
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே 4.7 

684: 
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும் 
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான் 
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல் 
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே 4.8 

685: 
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல் 
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் 
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே (2) 4.9 

686: 
உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன் 
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன் 
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் 
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே 4.10 

687: 
மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன் 
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி 
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன 
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே (2) 4.11 

தரவு கொச்சகக் கலிப்பா 

688: 
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை 
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே 
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் 
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே (2) 5.1 

689: 
கண்டா ரிகழ்வனவே காதலன்றான் செய்திடினும் 
கொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல் 
விண்டோ ய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ 
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே 5.2 

690: 
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன் 
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் 
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் 
கோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே 5.3 

691: 
வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் 
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால் 
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ 
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே 5.4 

692: 
வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே 
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால் 
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும் 
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே 5.5 

693: 
செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம் 
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால் 
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன் 
அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே 5.6 

694: 
எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள் 
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல் 
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஎன் 
சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே 5.7 

695: 
தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே 
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல் 
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன் 
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே 5.8 

696: 
நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் 
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் 
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே 
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே 5.9 

697: 
விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும் 
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த 
கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன 
நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே (2) 5.10 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

698: 
ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர் 

எனைப்பல் ருள்ளவிவ் வூரில்,உன்றன் 
மார்வு தழுவுதற் காசையின்மை 

அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு 
கூர்மழை போல்பனிக் கூதலெய்திக் 

கூசி நடுங்கி யமுனையாற்றில் 
வார்மணற் குன்றில் புலரநின்றேன் 

வாசுதே வாஉன் வரவுபார்த்தே (2) 6.1 

699: 
கொண்டையொண் கண்மட வாளொருத்தி 

கீழை யகத்துத் தயிர்கடையக் 
கண்டுஒல்லை நானும் கடைவனென்று 

கள்ள விழிவிழித் துப்புக்கு 
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ 

வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப 
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம் 

தாமோத ராமெய் யறிவன்நானே 6.2 

700: 
கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக் 

கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால் 
மருவி மனம்வைத்து மற்றொருத்திக் 

குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து 
புரிகுழல் மங்கை யொருத்திதன்னைப் 

புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை 
மருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே 

வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே 6.3 

701: 
தாய்முலைப் பாலி லமுதிருக்கத் 

தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று 
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு 

பித்தனென் றேபிற ரேசநின்றாய் 
ஆய்மிகு காதலோடு யானிருப்ப 

யான்விட வந்தவென் தூதியோடே 
நீமிகு போகத்தை நன்குகந்தாய் 

அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே 6.4 

702: 
மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு 

வீங்கிருள் வாயென்றன் வீதியூடே 
பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் 

போகின்ற போதுநான் கண்டுநின்றேன் 
கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக் 

கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன் 
என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் 

இன்னமங் கேநட நம்பிநீயே 6.5 

703: 
மற்பொரு தோளுடை வாசுதேவா 

வல்வினை யேன்துயில் கொண்டவாறே 
இற்றை யிரவிடை யேமத்தென்னை 

இன்னணை மேலிட்ட கன்றுநீபோய் 
அற்றை யிரவுமோர் பிற்றைநாளும் 

அரிவைய ரோடும் அணைந்துவந்தாய் 
எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய் 

எம்பெரு மான்நீ யெழுந்தருளே 6.6 

704: 
பையர வின்னணைப் பள்ளியினாய் 

பண்டையோ மல்லோம்நாம் நீயுகக்கும் 
மையரி யொண்கண்ணி னாருமல்லோம் 

வைகியெம் சேரி வரவோழிநீ 
செய்ய வுடையும் திருமுகமும் 

செங்கனி வாயும் குழலும்கண்டு 
பொய்யொரு நாள்பட்ட தேயமையும் 

புள்ளுவம் பேசாதே போகுநம்பீ 6.7 

705: 
என்னை வருக வெனக்குறித்திட் 

டினமலர் முல்லையின் பந்தர்நீழல் 
மன்னி யவளைப் புணரப்புக்கு 

மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய் 
பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப் 

பொய்யச்சங் காட்டிநீ போதியேலும் 
இன்னமென் கையகத் தீங்கொருநாள் 

வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே 6.8 

706: 
மங்கல நல்வன மாலைமார்வில் 

இலங்க மயில்தழைப் பீலிசூடி 
பொங்கிள வாடை யரையில்சாத்திப் 

பூங்கொத்துக் காதிற் புணரப்பெய்து 
கொங்கு நறுங்குழ லார்களோடு 

குழைந்து குழலினி தூதிவந்தாய் 
எங்களுக் கேயொரு நாள்வந்தூத 

உன்குழ லின்னிசை போதராதே 6.9 

707: 
அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன் 

றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள் 
எல்லிப் பொழுதினி லேமத்தூடி 

எள்கி யுரைத்த வுரையதனை 
கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான் 

குலசே கரனின் னிசையில்மேவி 
சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும் 

சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே (2) 6.10 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

708: 
ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ 

அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ 
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ 

வேழப் போதக மன்னவன் தாலோ 
ஏல வார்குழ லென்மகன் தாலோ 

என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய 
தாலொ லித்திடும் திருவினை யில்லாத் 

தாய ரில்கடை யாயின தாயே (2) 7.1 

709: 
வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண் 

மருவி மேலினி தொன்றினை நோக்கி 
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள் 

பொலியு நீர்முகில் குழவியே போல 
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும் 

அங்கை யோடணைந் தானையிற் கிடந்த 
கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ 

கேச வாகெடு வேன்கெடு வேனே 7.2 

710: 
முந்தை நன்முறை யுன்புடை மகளிர் 

முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி 
எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே 

எழுமு கில்கணத் தெழில்கவ ரேறே 
உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ் 

விரலி னும்கடைக் கண்ணினும் காட்ட 
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா 

நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே 7.3 

711: 
களிநி லாவெழில் மதிபுரை முகமும் 

கண்ண னேதிண்கை மார்வும்திண் டோ ளும் 
தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும் 

தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த 
இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால் 

பருகு வேற்கிவள் தாயென நினைந்த 
அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த 

பாவி யேனென தாவிநில் லாதே 7.4 

712: 
மருவு நின்திரு நெற்றியில் சுட்டி 

அசைத ரமணி வாயிடை முத்தம் 
தருத லும்,உன்றன் தாதையைப் போலும் 

வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர 
விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து 

வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும் 
திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் 

தெய்வ நங்கை யசோதைபெற் றாளே 7.5 

713: 
தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா 

தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால் 
மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன் 

மார்வில் மன்னிடப் பெற்றிலே னந்தோ 
வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும் 

வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சல் 
உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன் 

என்னை எஞ்செய்யப் பெற்றதெம் மோயே 7.6 

714: 
குழக னேஎன்றன் கோமளப் பிள்ளாய் 

கோவிந் தாஎன் குடங்கையில் மன்னி 
ஒழுகு பேரெழி லிளஞ்சிறு தளிர்போல் 

ஒருகை யாலொரு முலைமுகம் நெருடா 
மழலை மென்னகை யிடையிடை யருளா 

வாயி லேமுலை யிருக்கவென் முகத்தே 
எழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கந் 

தன்னை யுமிழந் தேனிழந் தேனே 7.7 

715: 
முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும் 

முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும் 
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும் 

நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும் 
அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும் 

அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும் 
தொழுகை யுமிவை கண்ட அசோதை 

தொல்லை யின்பத் திறுதிகண் டாளே 7.8 

716: 
குன்றி னால்குடை கவித்ததும் கோலக் 

குரவை கோத்த தும்குட மாட்டும் 
கன்றி னால்விள வெறிந்ததும் காலால் 

காளி யன்தலை மிதித்தது முதலா 
வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம் 

அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர 
ஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன் 

காணு மாறினி யுண்டெனி லருளே 7.9 

717: 
வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி 

வரண்டு நார்நரம் பெழக்கரிந் துக்க 
நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ 

சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய் 
கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய் 

கடைப்பட் டேன்வெறி தேமுலை சுமந்து 
தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன் 

தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே 7.10 

718: 
மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை 

வாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து 
எல்லை யில்பிள்ளை செய்வன காணாத் 

தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் 
கொல்லி காவலன் மாலடி முடிமேல் 

கோல மாம்குல சேகரன் சொன்ன 
நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள் 

நண்ணு வாரொல்லை நாரண னுலகே (2) 7.11 

தரவு கொச்சகக் கலிப்பா 

719: 
மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே 
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர் 
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே 
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ (2) 8.1 

720: 
புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே 
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தய் 
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே 
எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ 8.2 

721: 
கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய் 
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ 
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே 
எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ 8.3 

722: 
தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன் 
மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள் 
காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே 
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ 8.4 

723: 
பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி 
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே 
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே 
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ 8.5 

724: 
சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே 
அற்றவர்கட் கருமருந்தே அயோத்திநகர்க் கதிபதியே 
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே 
சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா தாலேலோ 8.6 

725: 
ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே 
வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே 
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே 
ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ 8.7 

726: 
மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே 
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே 
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே 
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ 8.8 

727: 
தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய் 
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே 
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே 
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ 8.9 

728: 
தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே 
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே 
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே 
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ (2) 8.10 

729: 
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன் 
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை 
கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன 
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே (2) 8.11 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

730: 
வன்தாளி னிணைவணங்கி வளநகரம் 

தொழுதேத்த மன்ன னாவான் 
நின்றாயை அரியணைமே லிருந்தாயை 

நெடுங்கானம் படரப் போகு 
என்றாள்,எம் இராமாவோ உனைப்பயந்த 

கைகேசி தஞ்சொற் கேட்டு 
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் 

நன்மகனே உன்னை நானே (2) 9.1 

731: 
வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை 

வேண்டாதே விரைந்து வென்றி 
மைவாய களிறொழிந்து தேரொழிந்து 

மாவொழிந்து வனமே மேவி 
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் 

இளங்கோவும் பின்பு போக 
எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ 

எம்பெருமான் எஞ்செய் கேனே 9.2 

732: 
கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் 

குலமதலாய் குனிவில் லேந்தும் 
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் 

மனமுருக்கும் வகையே கற்றாய் 
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் 

வியன்கான மரத்தின் நீழல் 
கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ 

காகுத்தா கரிய கோவே 9.3 

733: 
வாபோகு வாஇன்னம் வந்தொருகால் 

கண்டுபோ மலராள் கூந்தல் 
வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா 

விடையோன்றன் வில்லைச் செற்றாய் 
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் 

மனமுருக்கும் மகனே இன்று 
நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் 

போகாதே நிற்கு மாறே 9.4 

734: 
பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய 

மெல்லடிகள் குருதி சோர 
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப 

வெம்பசிநோய் கூர இன்று 
பெரும்பாவி யேன்மகனே போகின்றாய் 

கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற 
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன் 

எஞ்செய்கேன் அந்தோ யானே 9.5 

735: 
அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் 

கேளாதே அணிசேர் மார்வம் 
என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே 

முழுசாதே மோவா துச்சி 
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் 

கமலம்போல் முகமும் காணாது 
எம்மானை யென்மகனை யிழந்திட்ட 

இழிதகையே னிருக்கின் றேனே 9.6 

736: 
பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப் 

புனைந்துபூந் துகில்சே ரல்குல் 
காமரெழில் விழலுடுத்துக் கலனணியா 

தங்கங்க ளழகு மாறி 
ஏமருதோ ளென்புதல்வன் யானின்று 

செலத்தக்க வனந்தான் சேர்தல் 
தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே 

விசிட்டனே சொல்லீர் நீரே 9.7 

737: 
பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும் 

தம்பியையும் பூவை போலும் 
மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென் 

மருகிகையும் வனத்தில் போக்கி 
நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட் 

டென்னையும்நீள் வானில் போக்க 
என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில் 

இனிதாக விருக்கின் றாயே 9.8 

738: 
முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி 

அவன்தவத்தை முற்றும் செற்றாய் 
உன்னையுமுன் னருமையையு முன்மோயின் 

வருத்தமுமொன் றாகக் கொள்ளாது 
என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக் 

கொண்டுவனம் புக்க எந்தாய் 
நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் 

ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே 9.9 

739: 
தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும் 

சுமித்திரையும் சிந்தை நோவ 
கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட 

கொடியவள்தன் சொற்கொண்டு இன்று 
கானகமே மிகவிரும்பி நீதுறந்த 

வளநகரைத் துறந்து நானும் 
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் 

மனுகுலத்தார் தங்கள் கோவே 9.10 

740: 
ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய் 

வனம்புக்க அதனுக் காற்றா 
தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான் 

புலம்பியஅப் புலம்பல் தன்னை 
கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் 

குடைக்குலசே கரஞ்சொற் செய்த 
சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார் 

தீநெறிக்கண் செல்லார் தாமே (2) 9.11 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

741: 
அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும் 

அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி 
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி 

விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை, 
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத் 

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை 

என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே (2) 10.1 

742: 
வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி 

வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி 
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து 

வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின் 
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத் 

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த 

அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே 10.2 

743: 
செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் 

சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி 
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு 

வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை 
தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் 

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 
எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை 

இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே 10.3 

744: 
தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் 

தென்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை 
பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் 

பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து 
சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று 

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற 

இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே 10.4 

745: 
வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று 

வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி 
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக் 

கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி 
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத் 

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார் 

திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே 10.5 

746: 
தனமருவு வைதேகி பிரிய லுற்றுத் 

தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி 
வனமருவு கவியரசன் காதல் கொண்டு 

வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான் 
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத் 

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 
இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை 

ஏத்துவா ரிணையடியே யேத்தி னெனெ 10.6 

747: 
குரைகடலை யடலம்பால் மறுக வெய்து 

குலைகட்டி மறுகரையை யதனா லேரி 
எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன் 

இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து 
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத் 

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் 

அரசாக வெண்ணேன்மற் றரசு தானே 10.7 

748: 
அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி 

அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான் 
றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி 

உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் 
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் 

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால் 

பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே 10.8 

749: 
செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று 

செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த 
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத் 

தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட 
திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத் 

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 
உறைவானை மறவாத வுள்ளந் தன்னை 

உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே 10.9 

750: 
அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி 

அடலரவப் பகையேறி யசுரர் தம்மை 
வென்று,இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற 

விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி 
சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத் 

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 
என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும் 

இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே 10.10 

751: 
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் 

திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை 
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் 

றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா 
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் 

கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த 
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் 

நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே (2) 10.11 

குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம் 

TRS Iyengar

TRS Iyengar

Born on Makara Uthiradam star, native of Mukkur and brought up in Ladavaram village near Arcot and now well settled in Mumbai for over five decades. Presently, at 70, trying to run this website without any commercial expectations or profit motive, just for the sake of our future generations to understand about Sanatana Dharma & Srivaishnavam sampradayam.Within my limited knowledge that I put it here, what I learnt from the world.

Leave a Comment